செவ்வாய், 22 செப்டம்பர், 2009

இதயம் எழுதும் மடல்! (18)



மீண்டும் ஓர் அதிகாலை!உனைத்
தீண்டும் இன்பக்கதிரொளி!மனத்
தூண்டல் சேர் சுதிராகம்! உனைத்
தீண்டிவிட வருகிறது!

வந்தது புதுவருடம்!நேரில்
வந்து நின்றாய் நீ எழிலரசி!
தந்தது முத்தங்களா! இல்லை..இல்லை....

சந்தம் இசைத்துவிடும்
சுந்தரத்தேன் இதழ்கள்
விந்தை நிறைத்துவிட்ட முல்லைத்தேன் வடிப்புகள்!

தந்திகள் மீட்டிவிட சுரம்
சிந்திய சுகங்கள் இதயம்
பந்தியை விரித்து பரிமாறிய விந்தைகள்.....

மொந்தைக்கள் தோற்றதடி!காதல்
சிந்தைக்குள் ஏற்றமதாய் வேகம்
சிந்தைகிளறி விட்டதடி!

நடந்தது நடப்பது நடக்கப்போவது
கடந்து நாம் மிதந்தோம்!காதல்
வடந்தனில் கட்டுண்டோம்!

நினைக்கையில் இனிப்பு!
மனத்தில் நிறைப்பு!கவிதை
கணத்தினில் விரிப்பு!

" வருவேன்! வருவேன்! வருவேன்!
தருவேன்! தருவேன்! பருகத்
தருவேன்! தருவேன்! "என்றாய்!

தேன்மொழியே! நீ வந்தாய்!
தேன்தமிழாய் கவிதந்தாய்!
நான் மகிழ்ந்தேன்!அகம் மலர்ந்தேன்!

இதயத்து நாற்காலி போட்டாய்!"கவிமேதை"
இதயத்து மேத்தாவை இனிமையுடன் இணைத்தாய்!
"உதயத்துக்கவிக்கு விருது கிடைத்தது!

இதயத்தை மென்மலராய் வருடுகிறதே!" என்றாய்!
உதயத்தை நமக்குக் காட்டியகவியல்லவா!நம்
இதயத்தை இணைத்து வைத்த விந்தையாளரல்லவா!

இதயங்களில் நாற்காலி போட்டகவிஞன்!நல்
இதயங்களை வருடிய மன்னவன்!இனிமை
இதயங்களின் நற்கவிமகனல்லவா அவன்!

"எழுது
எழுது
எனக்கொரு கடிதம்
எழுது!
என்னை
நேசிக்கிறாய்
என்றல்ல....
நீ
வேறு எவரையும்
நேசிக்கவில்லை
என்றாவது
எழுது!"

என்று இனிமைக்கவி தந்தவன்!
தென்றல் தனிமை நீக்கம் செய்தவன்!
ஒன்றாய் இணைந்திருக்கச் செய்தவன்!

இன்று நினைக்கையிலும் இதயம்
தென்றல் தவழ்வருடல் உதயம்
இன்றாய்த் தெரிகிறதே!

உன்னையும் என்னையும்........
உன்னைப்போல் என்னைப்போல் பலகாதற்
கண்களைத்திறந்தவன் அவன்!

"காத்திருக்கும் வரை
நம்பெயர்
காற்றென்றே இருக்கட்டும்!
புறப்பட்டு விட்டால்
புயலென்று புரிய வைப்போம்!"

என்று எழுதியவன்.....
என்றும் நம்மனங்களில் புதிய வீச்சுக்கள் தந்தவன்!
தென்றலாய் புயலாய் நம்மைப்புறப்படவைத்தவன்!

"கல்யாண மேடையை
அலங்கரிப்பதற்காகக்
கனவுகள் கண்ட
கன்னிப்பூக்கள்
சவப்பெட்டியின் மேனியில்
எரிந்து விழுந்தன!
ஒரு மகா காவியத்திற்கு
உன்னை நாயகியாக்கினேன்!
நீ
ஒரு கவிதைக்குக்கூட
உருவம் கொடுக்காமல்
போய்விட்டாயே!" என்று

கண்ணீர்ப்பூக்களின் கண்ணீர் நிலைதனை
கண்ணீர்ப்பூக்களில் கவிதையாய்க் கொடுத்தவன்!நிஜக்
கண்ணீர்க் கவிதைகளை மண்ணில் விதைத்தவன்!

"உன்னையன்றி ஒரு
பெண்ணை
நெஞ்ச விரல்களையும்
நீட்டித்தொடேன்!
என்று
அஞ்சனவண்ணன்
அறிவிப்புச் செய்தது
கம்பன் நமக்குக்
காட்டும் இல்லறம்!...

வைர அட்டிகையும்
வரதட்சணை பாக்கிகளும்
உன்னுடைய
தந்தை வந்து
உடனே தராவிட்டால்...
தோகையே
உன்னைத்
தொடமாட்டேன்! என்று
இளைஞர்கள் சொல்வது
இன்றைய இல்லறம்!" என்று

அன்றும் இன்றும் தொட்டுக்காட்டி
என்றும் இளையமனங்களைச் சுட்டிக்காட்டி
நன்கு விழிப்புணர்வைத்தூண்டியவன் அவன்!

"காதல் என்றாலும் "சமூகச்
சீர்கேடு" என்றாலும் "உலகப்போராட்டம்
பண்பாடு" என்றாலும் அவன் கவிகள் கோடுகாட்டுமே!

"ஆகாயத்துக்கு அடுத்தவீடு"
ஆஹா! நம் கவிஞனுக்கு "சாகித்திய அக்கடமி" விருது!
கண்ணீர்ப்பூக்களே தகுதிதான் அதற்கு! ஆனாலும்

காத்திருக்க வைத்துக் கவிஞனைப்
பார்த்திருக்க வைத்து விழி
பூத்திருந்த வாசகமனங்களில் தேன்

வார்த்து விட்ட சேதி அது! "நீ
சேர்த்துவிட்டாய் நல்ல நீதியடி!" என்று
நீதிதேவதையை போற்றிவைக்கும் நேரமிது!

'இந்த
பூமி உருண்டையைப்
புரட்டிப்போடக்கூடிய
நெம்புகோல் கவிதையை
உங்களில்
யார் பாடப்போகிறீர்கள்!"

என்று கேட்ட கவிஞனுக்கு...
என்றும் விருதுகளாய் வாசகநெஞ்சங்கள்
குன்றாய்க் குவிக்குமே!...'வாழ்த்துக்கள் வாழ்த்துவோமே!"...

அன்று வந்தாய்! வந்து தந்தாய்!
ஒன்றாய் ஓராயிரம் விடயங்கள் பேசினோம்!
இல்லை...இல்லை.. நீ பேசி என்னைப்பேசவைத்தாய்!

பொங்கலோடு வந்தாய்! நீயே
பொங்கலாய் நின்றாய்! உன்னை
பொங்கவைத்து பொங்கிவைத்து

பகிர்ந்துகொண்ட சுகங்கள்! புதுவருடம்
புரிந்து தந்த சுகராகங்கள்! இன்றும்
நினைவுகளாய் தித்திக்க...தித்திக்க...

நேர்வகிடுச் சுந்தரியே! உன்
சீர்சிறப்பைச் சொல்வதென்றால்.....
பார்வியக்கும்! பூர்வஜென்மம் செய்த

புண்ணியமாய் வந்தடைந்தாய்!
எண்ணியவான் கலந்து சென்றாய்!உன்
எண்ணமெலாம் நிறைந்தவனைக் கலந்து சென்றாய்!

வருஷமெல்லாம் வசந்தமாய் வரு
வருஷமெல்லாம் நினைக்க வைக்கும்
நறுமணமாய் நிலைக்குமடி! உனக்காய்...

இதயமெலாம் நிறைந்து எழுதும்
இதயமடல் இன்றும் நினைவுகளை மீட்டிவிட்ட...
இதயநிறை நினைவோடு மீண்டும் மறு
இதயமடல் வரும் வரை தென்றலாய் உனைவருடி....

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6214&hl=

இதயம் எழுதும் மடல் (17)


எண்ணமெல்லாம் நீயாய்
எனக்குள் இனிப்பவளே!
வண்ணமெல்லாம் கண்ணனாகி
எண்ணமெலாம் ஆண்டாளாய்... கவிதை படிப்பவளே!

அன்றைய நினைவுகளை
இன்றும் இதமாய் மீட்டிவிட....
இன்றைய அதிகாலை உன் தரிசனம்!

கனவில்தான்! கனவுகள்தானே
நினைவுகளின் எதிரொலியாகின்றன!
மனதில் நள்ளிரவின் நினைவுதான்!

பள்ளிகொள்ளும் புள்ளிமயில்! மனதில்
துள்ளிவிளையாடினாய்! உள்ளிருக்கும்
வெள்ளிமலர்ச்சிரிப்பினில் எனைத்தாக்கினாய்!

"கள்ளி என்னடி!" என்றேன்!
அள்ளிவரும் ஆசையோடு அழகாக நோக்கினாய்!
துள்ளிவந்த விழிக்கணையால்....

"சொல்லடி!" என்றேன்!
"இன்று என்ன தேதி!" என்றாய்!
"என்னடி நள்ளிரவு தாண்டியாச்சே!

இருபத்தியொன்றடி!" என்றேன்!
"இரு! பத்தில் ஒன்றைத்தொடடி! என்றேன்!
இரு இதழோடு இதழ் வைத்து இணைத்தாய்!

இருநிமிட மௌனங்கள்!
இருநிலை மறந்து வருடல்கள்!
ஒருநிலைக்குள் உள்ளங்கள்!.....

"ஓ! முதல் பார்வை கொடுத்தமுத்தம்!
மறந்திடத்தான் முடிந்திடுமா! விழிப்பார்வை
தொடுத்ததுவும்.... முதல்முத்தம் கொடுத்ததுவும்...

இன்றல்லவா! இன்றல்லவா!
ஒன்றாகிக் கலந்தநாள்
இன்றல்லவா! மறந்தேனடி கள்ளி!

மன்னிப்பாய்!" என்றேன்!
உன்னிப்பாய் விழிகலந்தாய்!
"மன்னிப்பா! கிடையாது! என்றாய்!

"மன்னிக்கும் கடவுளல்ல நான்! என்றாய்!
"மன்னிக்கும் மனந்தானடி கடவுள்!" என்றேன்!
உன்னிப்பாய் இழுத்தணைத்து இதழ்பதித்தாய்!

"இன்றுபோல் இருக்கிறது!
அன்று தந்த நினைவுகள்!
நன்றுதான்! நன்றுதான்!"

என்று என் நினைவலைகள்.....
நன்று நான் கண்ணுறங்கி விட்டேன்!
தென்றல் தழுவல் ஒன்று கதவு

திறந்து மெல்ல வருடியது!.....மனக்கதவு
திறந்து மெல்ல சுகமாக வருடியது! போர்வை
திறந்து மெல்ல சுகராகம் பாடியது!

"தூக்கமா!" என்றாய்..."உன்
தாக்கம் தீரவில்லை! என்றேன்!
"ஏக்கங்கள் தீர்வதற்கு நாள் வரட்டும்" என்றாய்!

மடிமீது என் தலைவைத்து
இதமாகக்கோதினாய்! "விடிகாலைப்
பொழுதடி! வீணாகலாமா!" என்றேன்!

"விடிகாலைப்பொழுதில் கவி
வடித்திடலாம்! எழுந்திருங்கள்!" என்றாய்!
"மடிமீது கவிபடிக்கப் புதுராகம் பிறக்கும்" என்றேன்!

"அடிதான் கிடைக்கும்! அதற்கெல்லாம்
முடியாது! எழுந்திருங்கள! என்றாய்!
"அடி போடி...தாடி! தேன் தாடி!" என்றேன்!

"தேன் ஓடிப்போய் விடாது!
தேன் மொழி வாடிப்போய்விடாது! இதழ்த்
தேன் வற்றிப்போய் விடாது!

காலம் வரட்டும்!கவிதைக்
கோலம் போடுதற்கு அந்தக்
காலம் வரட்டும்! கவிதைக்

கோலம் வரட்டும்! எழுந்து எழுதுங்கள்!
கோலமயில் காத்திருக்கிறாள்! மை
கோப்பையோடு!" என்றாய்!

"என்னடி! கவிதை! கவிதை! என்கிறாய்!
கவிதை நீ தராமல் கவிதை எப்படி வரும்!" என்கிறேன்!
கன்னமது சிவந்திடக் "காத்திருங்கள்! கவிதை

சேர்த்தெடுத்துக்கொடுக்கும்
காலம் வரும்! எனை
வார்த்தெடுத்துக் கொடுக்கும் நாளும் வரும்" என்றாய்!

"எழுந்திருங்கள்! எல்லோரும்
விழித்திருக்கப் போகிறார்கள்!
எழுந்திடுங்கள்! கவிதை எழுதிடுங்கள்!

வாரப் பத்திரிகைக் காரனுக்கு
நேரம் கொடுத்திருக்கிறேன்! விடியல்
காலை கொடுத்திடணும்! எழுந்திருங்கள்!" என்றாய்!

"கவிதை நீ தராமல்
கவிதை வராதடி! ஒன்று தாடி! இல்லைக்
கவிதை வராதடி போடி!" என்றேன்!

"கவிதை நன்று எழுதுங்கள்!
கவிதை ஒன்று தருவாள்!" என்றாய்!
"கவிதையே! ஒன்று கொடேனடி இப்போது!" என்றேன்!

"இன்று ஒரு வழி பார்ப்பதாக உத்தேசமோ!
ஒன்றுங் கிடைக்காது! எழுந்திருங்கள் முதலில்!"
என்று இழுத்து எழுப்பி விட்டாய்!

"என்னடி தொல்லை உன்னோடை!
சொல்லடி! என்ன தலைப்பு!" என்றேன்!
"சந்திக்கு வராத சங்கதிகள்!" என்றாய்!

"என்னடி தலைப்பு இது!
யாரடி தந்தது இதை!
சொல்லடி!" என்றேன்!

"கொடுத்தது நான் தான்!
எடுத்து எழுதுங்கள்!" என்றாய்!"தலைப்பைக்
கொடுத்தது நீயா! என்னடி சொல்கிறாய்....

கொடுப்பதற்குத் தலைப்பில்லாமல்
கொடுத்தியா இத்தலைப்பை!போடி!
கொடுத்திட முடியாதென்று சொல்லடி!"என்றேன்1

"ஏன் தலைப்புக்கு என்ன குறைச்சல்!
என்னவாம் ஏது! நாடு போற போக்கைப்பார்த்து
நான்தான் கொடுத்தேன் இத்தலைப்பை!

எந்தத் தலைப்பிலும் கவிதை
சந்தம் படைப்பவர் நீங்கள்!
இந்தத் தலைப்புக்கென்ன குறைச்சலைக் கண்டீர்கள்!" என்றாய்!

"இந்தத் தலைப்பில் குறைச்சலில்லை!
சந்தக் கவிக்கும் குறைச்சல் இல்லை!
சந்தைக் கிழுத்துவிடும் பல

சங்கதி வந்துவிடுமே! பல
சங்கடம் தந்திடுமே!" என்றேன்! "பலர்
சங்கதி வரட்டும! என்றே தந்ததே இத்தலைப்பு!" என்றாய்!

"தந்தை முழித்துவிட்டார்! சத்தம் கேட்கிறது!
தப்பாகப் போகிறது! நான் வருகிறேன!" என்றாய்!
சத்தமில்லாமல் சங்கடந்தந்து சென்றாய்!

சட்டென்று கண்விழித்தேன்!
கண்டது கனவாய்ப்போக கவிதையுனைக்
கண்டநாள் நினைவு துள்ள

வடிக்கின்றேன் மடலில்..
துடிக்கின்றேன் மனதில்!...
படித்தபின் துடிப்பாய்! நீயும்
வடித்திடு கவிதையாக!

தென்றலாய் வந்தாய்! மன
முன்றலில் மகிழ்வு தந்தாய்!
இன்றுபோல் நினைவிருக்க...உனைத்
தென்றலாய் வருடி......

மீண்டும் மறுமடலோடு இணையும் வரை.....

அன்புடன்
ஆதித்ததாஸன்