செவ்வாய், 2 ஜூன், 2009

"கவிச்சித்திரம்!"

சித்திரமே! சிந்திப்பாய்!கவிச்
சித்திரமே நீ சிந்திப்பாய்! புவிச்
சத்திரத்தில் கவிச்சித்திரத்தில்
சித்திரமே நீ சிந்திப்பாய்!

பத்திரமாய் மனம் சேர்த்துவைக்கும்!
சித்திரமாய் தினம் கோர்த்துவைக்கும்!
நித்திரையில் கண் விழிக்கவைக்கும்!
முத்திரையில் பண் செழிக்கவைக்கும்!

இத்தரை விழி சேர்த்தெடுத்து கவி
பத்தரை மாற்றாய் மனப்படம் பிடித்து
நித்திரை மனங்களை விழிக்கவைத்து
முத்திரை பதிப்பதே கவிதையென்பேன்!

சித்திரை நிலவுகள் சேர்ந்திருக்கும்!பல
முத்திரை முத்தங்கள் கோர்த்தெடுக்கும்!
சித்திரச் சோகங்கள் காட்டிநிற்கும்!சுய
சித்திரக் கோலங்கள் பாட்டில் வைக்கும்!

பத்திரமாய் பலர் பல கதைகள் அதைச்
சித்திரமாக்கிடும் கவிதைகளுள் சுயச்
சித்திரங்கள் சுய சிந்தையில்லாத மனச்
சித்திரங்கள் அவர் புராணங்களும் கவிச்

சித்திரத்தில் தினம் படம் பிடிக்கும்!மனச்
சித்திரத்தில் உன் மனச்சித்திரத்தில் தினம்
முத்திரையாய் இதைப்பதித்திடடி! இதய
முத்திரையாய் இதைப்பதித்திடடி!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=5938&hl=

"அவள்!"

இளகிய மனதினில்
இளமையின் இரகசியம்!
பழகிய மனதினில்
பழமையின் புதுசுகம்!

இளமயில் நடையினில்
குளுகுளு கவிதைகள்!
இளவெயில் இடையினில்
தழுவிடும் குளிர்மைகள்!

பழகிட பழகிடப்
பழமுதிர்ப் பாகுகள்!
இழகிட இழகிட
இழந்திடும் இரவுகள்!

அழகினில் அழகது
பழகிடும் பொழுதுகள்
இழந்திடும் போதினில்
வளர்ந்திடும் கனவுகள்!

இளநிறச் சிவப்பினில்
வளர்நிறைச் சிரிப்புகள்!
இளநீர் வார்ப்பினில்
களர்நிலக் களிப்புகள்!

குளம்நிறை சுகங்கள் என்
இளமயில் நளினங்கள்!அவள்
வளம் நிறைத்திங்கள்! என்னிதயக்
குளம் நிறைத் தினங்கள்!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"முட்டியவெடிப்பிது!"


முட்டாள் தினங்கள்
முட்டி மோதாதவரை
முட்டாள் மனங்கள்
முட்டி மோதலாம்!

எட்டாக் கனவுகள்
எட்டிக் கொள்ளும்வரை
கட்டாந் தரையிலும்
கட்டிக் கொள்ளலாம்!

துட்டால் உலகம்
முட்டி மோதும்வரை
எட்டாச் சமாதானம்
எட்டிப் போகலாம்!

விட்டால் உயிர்தனை
கட்டிக்கொள் உறவுகள்
எட்டாம் நாளிலும்தாம்
வெட்டிக் கொண்டோடலாம்!

பட்டால் அறிவிலே
குட்டிக் கொள்மனங்களை
எட்டாம் நாளிலும்
கட்டிக் கொண்டறியலாம்!

முட்டாள் மனங்களே
கெட்டித் தனங்களால்
முட்டாளாய் நினைத்து
முட்டிக்கொண்டு மோதலாம்!

சுட்டால் ஞானமா!
சுட்டித்தான் காட்டலாம்!
நட்டால் நற்கனிமரம் நாளை
பட்டினி போக்குமே!

முட்டாள் தினமதில்
முட்டி மோதியமுட்டாளின்
முட்டாள் மனதினில்
முட்டிய வெடிப்பிது!

நன்றி!
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"நல்வரவு"


அகரத்தில் ஆரம்பம்!
அருந்தமிழ்ப் பேரின்பம்!
சிகரத்தில் சேரின்பம்!
நறுந்தமிழ்ப் பாரின்பம்!

சிகரத்தில் சித்திரையாள்
இருந்திடும் இத்திருநாள்
உகரத்தில் உத்தமமாய்
விரும்பிடும் முத்திரைநாள்!

அகரத்தில் அகிலமகள்
அருந்தவங்கள் நிறைத்திடவே
உகரத்தின் உச்சமதாய்
வருந்தினங்கள் உயர்ந்திடவே

சிகரத்தில் வைத்திடுவாள்!
வருந்துயர்கள் நீக்கிடுவாள்!
உகரத்து உயிர்களெல்லாம்
விரும்பிடும் நல்வளம் தருவாள்!

வருக நல் சித்திரையே!
தருக நல் சித்தியையே!
மருவும் நல்முத்திரையாய்
மருவும் நல்சித்திரையே!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"வாழ்க்கை!"


"இதுவரை வாழ்க்கை
இன்னும் எதுவரையோ!" என்று
மின்னும் அதுவரை நாட்கள்
நகர்ந்திடட்டும்!இதயம்
"அதுவரை" என்று
தொடர்ந்திடட்டும்!

புதுவித மலராய்
புதுமைகள் நிறைவாய்
மதுமலர் மனமாய்
நிறைந்திடவே இதயம்
புதுமைகள் நிறைக்க
புரட்சிகள் பிறக்க
புதுவித சுகங்கள்
நிறைத்திடட்டும்!

நதிமன ஓடம்
விதிவழி ஓடும்! இதயம்
சுதிநயம் பாடும்!
சதிர்விளையாடும்!இறைவன்
கதியென நாடும்!
இனிமைகள் பாடும்!உலகம்
மதிநயம் பாடும்!
தனிமைகள் ஓடும்!

மதிதனை வளர்ப்பாய்!
மகிழ்வினை நிறைப்பாய்!
எதிர்நிலை அறிந்து
புதுயுகம் படைப்பாய்!உன்
விதிதனை அறிவாய்!
விதித்தவன் அறிவான்!நீ
மதிதனை வளர்த்து
விதிதனை ஜெயிப்பாய்!

நன்றி!
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

திங்கள், 1 ஜூன், 2009

"பேதை மடந்தைகள் பெண்களல்ல!"


காலையில் கடிகாரம்
ஏழுதரம் அடித்திருக்க
சோலையில் புதுமலராய்
பாவை நீ மலர்ந்திருந்தாய்!
சேலையில் படிமானம்
அழகாகச் சேர்த்திருந்தாய்!
"வேலையில் கவனம்!" என்று
விழிமேல் நீ மொழியானாய்!

"வேலையென்ன வேலையடி!
போடி மண்டு!" என்று தென்றல்
சோலைமலர் உன்னைச்
சுகமாகச் சேர்த்தெடுத்து
மாலைமலர்த் தென்றலதாய் இதழ்
முத்தங்கள் பதித்திட்டேன்!
"காலையில் இனியென்ன!
எழுந்திருங்கள்!" என்றாய்!

"காலையென்ன! மாலையென்ன!
மதியமென்ன!நள்ளிரவென்ன!விடி
காலையென நீயிருக்க இனி
வேலையென்ன வேலையடி!
மாலைவரை மகிழ்வோமடி
வாடி" என்று வளைத்திட்டேன்!
"வேலைநேரம் முடித்து நீங்கள்
மாலைவந்து சேர்ந்திடுங்கள்!விடி

காலைவரை பாவையுங்கள்
கைப்பிடிக்குள் வசப்படுவாள்!
காலைவரை சுகராகம் நீங்கள்
பாடிடுங்கள்!கூடிடுங்கள்!இப்போது
வேலைநேரம் எழுந்திடுங்கள்!என்று
வேல்விழியாலே மொழிமலர்ந்தாய்!
காலைநேரம் கோதையுன் கோவை
இதழ் இனிக்க இதழ்வெளுக்க

பாலைப்போல் பாவையுனைப்
பருகிவிட பகிர்ந்திருக்க
வேலைநேரம் மறந்து நீ
மயங்கிநின்று விருந்தளிக்க
காலையில் தொலைபேசி
அழைப்புமணி குரல்கொடுக்க
வேலையிட அழைப்புமணி
அதுவென்று புரியாமல் அவ்

வேலையும் பறிபோக மேதை
பாவையுன் சொற்கேளாது
காலைமுதல் மாலைவரை
வேலைதேடும் படலமதாய்
வேலைதேடி நானலைய
வறுமைநமைச் சூழ்ந்துவிட
சோலைமலர்ச் சுடரொளி நீ
கவலையிலே துரும்பானாய்!

காலையது கடுப்பாக
வேலையில்லா விடுப்பாக
மாலையது நெருப்பாக
மகிழ்வெல்லாம் தொலைப்பாக
காலை மாலைமதியமெல்லாம்
மனம்வெதும்பும் நிலைப்பாக
காலைமலர் உன் சொற்கேளாது
கடந்ததுவே காலங்கள்!

கடந்தவிட்ட காலங்கள்
உணர்த்தியவை ஏராளம்!"காலம்
கடந்துவிட்டால் திரும்பாது!
கவனம் மிகத்தேவை!"என்று
கடந்துவிட்ட காலங்களால்
வடம்பிடித்த ஞானங்கள்! "பேதை
மடந்தைகள் பெண்களல்ல!" என்று
கடந்து புத்தி உரைத்ததுவே!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6441&hl=

"உயிர்க்கவி!"

அடை மழைக்குள்
விடை குடைக்குள்!விழி
மடை திறக்கும்!காதல்
குடை விரிக்கும்!

கவி மடல் திறக்க
கவி மனம் துடிக்க இதழ்
குவித்திட நினைக்க முதல்
குவித்திடும் முத்தம்!

நடையது தளரும்!இள
நகையது புரியும்!இள
மடையது திறக்கும்!இள
முகையது சிலிர்க்கும்!

புவிநிலை மறக்கும்!
தவிநிலை வளர்க்கும்!
தவிப்பது தீர்க்க இதழ்கள்
குவிப்பது தொடரும்!

இடையது சிலிர்க்கும்!
கடைதனை விரிக்கும்!
விடையதைத் தேடி தேன்
மடைகளைத் திறக்கும்!

கவிமடல் திறந்து
கவிதைகள் எழுதும்!புதுக்
கவிதையாய் ஒன்று
கவிமடல் தனுள் உயிர்க்கும்!

மடையது திறந்து விழி
மடல்தனைத் திறந்து கவி
குடைநிழல் போலே புவி
நடைபயின்றிடச் சிரிக்கும்!

(ஓ)நாய்களா!

நன்றியுள்ள இனங்களில்
நன்றிகெட்ட இனங்களா!
ஒன்றிவிட்ட குணங்களால்
நன்றிகெட்ட தனங்களா!

இன்று நேற்று அல்ல!
அன்று தொட்ட கோலம்!
என்று மாற்று உண்டோ!
நன்று கெட்ட தன்றோ!

"நன்றி" என்ற ஒன்று
என்றும் நாய்க்கு உண்டு!
ஒன்றி விட்டால் அன்பில்
என்றும் மாற்றம் இன்று!

நன்றி கொன்ற மனங்கள்
என்றும் இங்கு உண்டு!செய்
நன்றி கெட்ட தனங்கள்
என்றும் பங்கு துண்டு!

சென்று கொல்லும் இனங்களில்
ஒன்று ஓநாய் இனங்களே!மனிதம்
இன்று கொல்லும் மனங்களில்
என்றும் ஓநாய்க் குணங்களே!

நன்றி இல்லா மனங்களே!
ஒன்றி நன்றாய் உணர்வீர்களே!
நன்றி இல்லா நாய்களா! நீவிர்
ஒன்றி ஒன்றாய் (ஓ)நாய்களா!


"கவிதை யு(மு)த்தம்!"


இப்படித் தொடங்கி
இப்படி முடிப்பதா!
அப்படித்தொடங்கி
அப்படி முடிப்பதா!
எப்படித்தொடங்கி
எப்படி முடிப்பதடி!நீ
இப்படிப் பார்த்தால்
எப்படி நான் வடிப்பதடி!

செப்படி நீ கண்ணே!
கலைப்பெண்ணே!
செப்படி வித்தைகளாய்
நினைவு நமை
எப்படி ஆட்டிப்
படைக்குமென்று காதல்
செப்படி வித்தை
யார் அறிதல் கூடும்!

முப்படி மூன்றாம்
பாலுக்குள் வீழ்ந்தால்
எப்படி எழுந்திடல்
முடியும்!கணமும்
அப்படியோர் நிலைகள்
உணர்ந்தவர் அறிவார்!
இப்படியோர் கலையில்
சுகம் இருப்பதை அறிவார்!

"தப்படி" என்று யார்
சொன்னார்!"இது
தப்படி!" என்று யார்
சொல்வார்! "இதில்
தப்படி நீ!" என்று யாரும்
சொல்வாரானால்
"தப்படி" அவர் சொல்வது
என்று நீ சொல்வாய்!

அப்படி ஒரு நிலை
காதலில்தானுண்டு!
அப்படி ஒருவகை
கவிதையுன்னில்தானுண்டு!
அப்படி ஒருநிலைக்
கலைக் கவிதை நீயடி!
அப்படி ஒருவகைக்
கலவிக் கவிதை நீபாலடி!

இப்படி ஒரு நிலை
உனக்குள் எனக்குள்!
இப்படி வரு நிலை
வேறுயாருக்குள் உண்டடி!
செப்படி பெண்ணே!
எப்படி நான் கவிசொல்ல!
செப்படி வித்தைகளைக்
கவியில் படம்பிடித்தால்......

"இப்படி யார்
கவிவடிப்பார்! இவர்தனை
இப்படிக் கவிவடிக்க
நீங்கள் தணிக்கையின்றி
எப்படி இவர் கவியை
அனுமதிப்பீர்!" என்று
அப்படி ஒரு கூட்டம்
குமுறிஒரு பிடி பிடித்திடுமடி!

"இதயக்கவித் திருடியே!"


கண்ணாடி
காட்டவில்லையா!உன்
முன்னாடி
உனைக் காட்டவில்லையா!கவிக்
கண்ணாடி
காட்டிக்கொடுக்குமே!திருட்டு
முன்னாடி
உனைக் கூட்டிக்கொடுக்குமே!

கண்ணாடிபோல்
என்மனக்கவிதை உன்
முன்னாடி உனைப்
படம்பிடித்துக்காட்டுமே!நிலைக்
கண்ணாடி முன்
நின்று நீ பார்க்கவில்லையா!
முன்னாடி உன்
திருட்டு எதுவென்று கூறவில்லையா!

"பெண்ணாடி! நீயும்
ஒரு பெண்ணாடி!" என்று
உன்நாடி உதிரம்
கூறவில்லையா"!தென்றல்
பெண்ணாடி நீ!
இல்லைத் தீப்புண்ணாடி நீ!"என்று
உன்நாடி உளறும்
உனைக் கேட்கவில்லையா!

மண்நாடி உன்னுடல்
போகுமுன் உன்மனக்
கண்ணாடி பேசாதோ
பலமுறை! "நீ
பெண்ணாடி!" என்று
உலகொருமுறை உன்மனக்
கண்ணாடி தனைத்
திறந்து கேட்காதோ!

கேட்குமே! கேட்குமே!
என்செவியில் செய்தி
கேட்குமே! பார்க்குமே!
உலகம் பார்க்குமே!புலவன்
கேட்கும் கேள்விதனைப்
பலமனங்கள் கேட்குமே!
கேட்குமே! கேள்விகேட்குமே!
புலவன் வாக்குப் பலிக்குமே!