வெள்ளி, 2 அக்டோபர், 2009

இதயம் எழுதும் மடல் (20)


கிழக்குநோக்கி விழிமடல்திறக்கும்!
வழக்காய் மனம் கிழக்காய்
கிழக்கின் பார்வையில் இதய
விளக்காய் ஒளிர்பவளே!உன்

கிழக்கில் இருந்து இன்றும் ஒருமடல் உனக்காய்.....

காலையது சிந்தனைகள் பிறப்பிடம்!
மாலையது ஏக்கத்தின் இருப்பிடம்!நள்ளிரவு
சோலையுடன் உற(றை)விடம்!

பாலைவனமானாலும்
சோலைநீ இணைந்துவிட்டால்...
காலைமலர்த் தென்றல்தவழ் சோலையாகுமே!

"என்ன புதுக்கவிதை" என்கிறாயா...
சின்னதாய் ஒரு கிறுக்கல் சிந்தனையில்....
சின்னக்கண்ணம்மா உனக்காய்...

"என்னாச்சு!மூடு வந்தாச்சா!" என்கிறாயா....
சொன்னாத்தான் புரியணுமா மண்டு...இதழ்கள்
சொன்னாத்தான் விரியணுமா கற்கண்டே...

"சரி!சரி! புரியுது புரியுது"...என்கிறாயா..
விரிகிற விழிகள் பதில் சொல்லுமே மண்டு...
"சரி சரி தொடரட்டும!" என்று இதழ் முணுமுணுப்பா...

சிரி! சிரி! சிரிக்கின்ற அழகே அது தனிக்கனி!
விரிகின்ற இதழ்கள் வடிக்கின்ற தேன்கள்
மரிக்கின்ற போதும் வேண்டுமடி மண்டு...

சிரிக்கின்ற அழகைப்படம் பிடித்தால் மடல்
விரிக்கின்ற தமிழே தொடர்கதையே...
விரிக்கின்ற கடலலைபோல் படர்கதையே!கடல்

சிரிக்கின்ற கவிநயம் கூட்டிடுமே...
எரிக்கின்ற காற்றும் குளிர் சேர்த்திடுமே!கவி
விரிக்கின்ற தேன்தமிழ் சுதிகாட்டிடுமே!

"குளிர்கால நடுக்கத்தில் பனி(ஐஸ்)மழையா...
துளிர்காலம் போயாச்சுக் கண்ணா!இது
குளிர்காலமையா வைக்காதீர் பனித்துகளை....

தளிர்காலம் வரட்டும் காத்திருங்கள"..என்கிறாயா!
குளிர்காலம் வந்தாலென்ன!இலை
தளிர்காலம் வந்தாலென்ன!போடிமண்டு...

வாடிநிற்கும் செடிகூட துளிர்த்துவிடும்!
மூடிநிற்கும் முகம்கூட தெரிந்துவிடும்!
ஆடிநிற்கும் பம்பரமாய் இதயம் சுழன்றடித்துநிற்கும்!

"வாடி" என்று சொல்லிசைக்கும் முன்பாக இதயம்
கூடிநின்று கூத்தடிக்கும்!தெம்பாகும்!உதயம்
பாடிவரும் பாட்டுக்கு அடிகொடுக்கும்!அடி

என்னவளே! உன்னழகுச்சிரிப்புக்கு அந்தசக்தி!
சின்னவளாய் இருந்தாலும் குண்டுமாங்காயானாலும்
மன்னவனே மயங்குகின்ற என்னவளே!

உன்னழகைச்சொல்லச் சொல்லச் சொல்லலாம்!
முன்னழகும் பின்னழகும் முன்னூறு படம்பிடிக்கும்!
என்னவளின் அழகுநிலை சின்னத்திரைத்தொடர்கதை....

இதழ்களின் சிவப்பும் விழிகளின் சிவப்பும்
இதழ்மடலோடு ஒன்றாய்ப் பதிக்கட்டும்!தொடர்ந்துபடி..
இதழோடு விளையாடும் இன்பநேரத்தில்...

இதமாய் ஒருபாடல்! இதழ்தவழ்தென்றலாய்
பதமாய் ஒருபாடல்! சுதிநயம் சேர்க்கவரும்
விதமாய் ஒருபாடல்!காவியக் கண்ணதாஸனவன்

காவியமாய்த் தீட்டிய "மாங்கனி"யில்
ஓவியமாய் ஒரு பாடல் பார்!இதயக்
காவியமானவன் வண்ணமாய்.....
"சின்ன வயதினிலே-சிரிக்கும்
செந்தமிழ்ச் சோலையிலே
கன்னிக் கடலமுதைக்-கருத்தால்
கண்டவன் யாரோடி!

தென்னவன் பிள்ளையடி-அவனோர்
சித்திரக் காரனடி!
கன்னல் வனந்தேடி-அலைந்த
காரியக்காரனடி!

நல்ல மனந்தானா!இணைந்தால்
நாடி மணப்பானா!
சொன்ன உறுதியெல்லாம்-காற்றில்
தூவி விடுவானா!

பிள்ளைக் குணந்தாண்டி-பேச்சில்
பித்தம் குழைப்பாண்டி!
வெள்ளை மனத்தாரை-வலையை
வீசிப் பிடிப்பாண்டி!

நட்ட நடுநிசியில்-ஒருநாள்
நல்ல மலரணையில்
கெட்ட குணமின்றி-எந்தன்
கிட்ட நடந்தாண்டி!

ஐயோ!
என்னென்ன சொன்னானோ!-சடையை
எட்டிப்பிடித்தானோ!
அன்னக்கொடியழகே!-உனையே
அன்பில் அணைத்தானோ!

அவ்வள வொன்றுமில்லை-கண்ணீர்
ஆற்றி நடந்தாண்டி!
கொவ்வை இதழ்துடிக்க-நானும்
கூவி அழுதேண்டி!

என்ன தவறு செய்தேன்!அவனை
எத்தித் துரத்திவிட்டேன்!
பின்னர் அவனுடனே-தனிமை
பேசக் கிடைக்கவில்லை!

முன்னர் நடந்ததெல்லாம்-துரையே
முற்றும் மறந்துவிடு!
பொன்னை நகையாக்கு- மார்பில்
பூட்டி மகிழ்ச்சி கொள்ளு!

என்று இரைந்தேண்டி-கேட்க
எவரும் இல்லையடி!
இன்று உரைத்ததெல்லாம்-வேறு
எவர்க்கும் இல்லையடி!" என்று
"
மாங்கனி"க் காவியத்தில்
மாங்கனி தன்தோழியுடன் தன்
மாங்கனி இதயத்தைத் திறந்துவைத்து

ஏங்கிடும் இனியவன் கேட்பதற்காய்
பாங்கினில் மலர்ந்திட்ட பாடல்!கவிப்
பாங்குடன் கவிகண்ணதாஸன் பாடல் அது!

சிறையினில் இருந்து இதயச்
சிறைதனை விரித்து இனிமை
நிறைவதாய் வரைந்த காவியம்!ஓவிய

நிறைவினைக் கொடுத்த காவியம்!புவியினில்
நிறைதமிழ் வடித்த பாநயம்!கவினுறை
உறைவிடப் பாசுரம்! பைந்தேன்தமிழ்த்

தேன்மொழிச் சொல்லோவியம்!அத்
தேன்மலர்க் காவியத்தைத்
தேன்மலர்ப்பொழுதினிலே சுவைத்தேனடி!

தேன்மொழித்தேவதையே!உன்
தேன் இதழ் சுவைக்கத்தந்தேனடி!மடல்
தேன் இதழ் படித்துச் சுவைப்பாயடி!அன்றுநீ

வான்வழி வலம் வந்தாய்!
மான்விழி மலர்தந்தாய்!உன்
தேன்மொழிச்சிரிப்பாலே கவித்

தேனிதழ் வெளுக்கவைத்தாய்!
மானிதழ் தவழ்கையிலே மலர்த்
தேனிதழ் நிறைந்ததடி!நிறைத்

தேன்தனை நீ குடித்தாய்!கவி
வான்மழை நான் கொடுத்தேன்!
தேன்மொழி நீ நிறைந்தாய்!உயிர்த்

தேனுடன் நீ கலந்தாய்!உன்
தேனுடல் கலந்ததனால் இதயத்
தேன்மொழி நிறைந்ததானால்....

தேன்மொழித்தேவதையே!
தேன்தமிழுக்கா பஞ்சமடி!
வான்வழி நிலவு மலர்த்
தேன்மடலுக்கா பஞ்சமடி!

மீண்டும் மறுமடலோடு உனைத்
தென்றலாய் வருடும் வரை....

அன்புடன்
ஆதித்ததாஸன்

இதயம் எழுதும் மடல் (19)


இதயத்து உணர்வுகள் ஏராளம்! என்
இதயத்துள் இடம்பிடித்த என்னவளே!மன
உதயத்துள் உள்ளவைகள் தாராளம்!தின
உதயத்துள் படம்பிடித்து வடம்பிடித்து

இதமாய் இழுத்தணைக்கும் மடல் உனக்காக...

சுற்றிவரக் காடுகள்!இதயம்
பற்றிப்படர்ந்த அந்தக்கிராமம்!
சுற்றிவரும் நீரோடைகள்!

சுழன்றுவரும் மனவுணர்வுள்
சுகந்தம் தரும் மலர்வனங்கள்....
சுழன்றுவரும் ஆசைகளால்....

சுகந்தச் சரம்தொடுக்க...
மகரந்தச்சுகம் கொடுக்க...
கரம்இணைக்கும் கோலங்கள்...

அழகுமயில் நீ!அன்றலர்ந்தமலராய்...
அழகுநடை பயின்று அந்தவீதியில்...
அழகுமலர்ப்பார்வைகளால் வடம்இழுத்தாய்...

இளமைமிகு இனிமைமலர்...இதழ்
இளநகைக்கோலங்களால் கோடுபோட செவ்
இளநீர்ச்சேலைக்குள் சோலையதாய்...

பழமையில் தோய்த்தெடுத்த
பார்வையில் நாணங்கள்....
இளமைதனைச் சீண்டிவிட...என்

பார்வையில் பதியம்வைத்த திங்களே...இதயக்
கோர்வைக்குள் சிக்கினாயே அன்று...கவிக்
கோர்வைக்குள் சுதியானாய் இன்று....

"பார்க்கவேண்டும்...கணம்தனும் பிரியாது
பார்வையோடு பதிக்கவேண்டும்" என்ற
தீர்வோடு மனம்படம்பிடிக்க....

"என்னடா இது வீண்வம்பு
வேண்டாமே!" என்று
கன்னத்தில் இதயம்......

இரண்டுபோட்டதுபோல் உணர்வோட...
பின்னலிட்ட கூந்தல்
திரண்டுவிடும் ஆசைகளால்...

"கன்னத்தில் முத்தமிடத்தயக்கம்
என்ன!" என்றுசொல்ல..கூட்டல்
பின்னமாய் சித்தம் குளிர்ந்துவிட.....

திருட்டுப்பார்வைக்குள் மின்னலாய்
உருவெடுத்தாயே நீ....
இருட்டுப்போர்வைக்குள் ஒளியாகிப்போனாயே நீ!

இரகசிய இனிமை நாடகத்துள்
இரகசிய இதயங்கள் சங்கமத்துள்
இரசனைகள் இடம்பிடித்த வண்ணம்...அடடா..

இரகசியமாய் முகவரிகூறி....
இரகசியச் சந்திப்புகள்...இனிமைச்சந்தங்கள்...
இரவுபகல் என்றில்லா இனிமைநிறைத்தித்திப்புக்கள்...

சிவந்த நிற மேனி மேலும்
சிவந்துவிடும் இதழ்ச்சத்தங்கள்...கன்னம்
சிவந்துவிட நாணங்கள் சுதிசேர்த்தகோலங்கள்...

"சிவ சிவா..என்னடா இது!" என்று
சிவமாய் சிவத்தோடு சிவமாய்...
சிவந்துநின்றாயே...இரண்டறக்கலந்தாயே அன்று...

"உடல் இணைந்திருக்கும் கணங்கள் இதழ்
மடல்வரைந்திருக்கும் சுகங்கள்...
கடல் கடந்துசென்றாலும் மறந்திடாதே!" என்றாய்!

"கடல் கடந்தால் என்ன...
உடல் பிரிந்தால் என்ன...உயிர்
உணர்வாய் இணைந்து வாழுமே!"என்றேன்!

இன்று நினைத்தாலும் இனிக்குதடி என்னவளே...
என்றும் தென்றலே! நீ பொங்கிவரும் கங்கையே!
ஒன்றி இணைந்துவிட்ட திங்களே!..இனிஎன்றும்
கன்றிவிடும் இனிமைக்கோலங்களே!...

கோலங்கள் தொடரும்..இனிமைக்
காலங்கள் வளரும்!கவிக்
கோலங்கள் மணம் நிறைக்கும்!
மீண்டும் மறுமடலில் இதமாய் உனைத்தீண்டும்வரை...

அன்புடன்
ஆதித்ததாஸன்

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

இதயம் எழுதும் மடல்! (18)



மீண்டும் ஓர் அதிகாலை!உனைத்
தீண்டும் இன்பக்கதிரொளி!மனத்
தூண்டல் சேர் சுதிராகம்! உனைத்
தீண்டிவிட வருகிறது!

வந்தது புதுவருடம்!நேரில்
வந்து நின்றாய் நீ எழிலரசி!
தந்தது முத்தங்களா! இல்லை..இல்லை....

சந்தம் இசைத்துவிடும்
சுந்தரத்தேன் இதழ்கள்
விந்தை நிறைத்துவிட்ட முல்லைத்தேன் வடிப்புகள்!

தந்திகள் மீட்டிவிட சுரம்
சிந்திய சுகங்கள் இதயம்
பந்தியை விரித்து பரிமாறிய விந்தைகள்.....

மொந்தைக்கள் தோற்றதடி!காதல்
சிந்தைக்குள் ஏற்றமதாய் வேகம்
சிந்தைகிளறி விட்டதடி!

நடந்தது நடப்பது நடக்கப்போவது
கடந்து நாம் மிதந்தோம்!காதல்
வடந்தனில் கட்டுண்டோம்!

நினைக்கையில் இனிப்பு!
மனத்தில் நிறைப்பு!கவிதை
கணத்தினில் விரிப்பு!

" வருவேன்! வருவேன்! வருவேன்!
தருவேன்! தருவேன்! பருகத்
தருவேன்! தருவேன்! "என்றாய்!

தேன்மொழியே! நீ வந்தாய்!
தேன்தமிழாய் கவிதந்தாய்!
நான் மகிழ்ந்தேன்!அகம் மலர்ந்தேன்!

இதயத்து நாற்காலி போட்டாய்!"கவிமேதை"
இதயத்து மேத்தாவை இனிமையுடன் இணைத்தாய்!
"உதயத்துக்கவிக்கு விருது கிடைத்தது!

இதயத்தை மென்மலராய் வருடுகிறதே!" என்றாய்!
உதயத்தை நமக்குக் காட்டியகவியல்லவா!நம்
இதயத்தை இணைத்து வைத்த விந்தையாளரல்லவா!

இதயங்களில் நாற்காலி போட்டகவிஞன்!நல்
இதயங்களை வருடிய மன்னவன்!இனிமை
இதயங்களின் நற்கவிமகனல்லவா அவன்!

"எழுது
எழுது
எனக்கொரு கடிதம்
எழுது!
என்னை
நேசிக்கிறாய்
என்றல்ல....
நீ
வேறு எவரையும்
நேசிக்கவில்லை
என்றாவது
எழுது!"

என்று இனிமைக்கவி தந்தவன்!
தென்றல் தனிமை நீக்கம் செய்தவன்!
ஒன்றாய் இணைந்திருக்கச் செய்தவன்!

இன்று நினைக்கையிலும் இதயம்
தென்றல் தவழ்வருடல் உதயம்
இன்றாய்த் தெரிகிறதே!

உன்னையும் என்னையும்........
உன்னைப்போல் என்னைப்போல் பலகாதற்
கண்களைத்திறந்தவன் அவன்!

"காத்திருக்கும் வரை
நம்பெயர்
காற்றென்றே இருக்கட்டும்!
புறப்பட்டு விட்டால்
புயலென்று புரிய வைப்போம்!"

என்று எழுதியவன்.....
என்றும் நம்மனங்களில் புதிய வீச்சுக்கள் தந்தவன்!
தென்றலாய் புயலாய் நம்மைப்புறப்படவைத்தவன்!

"கல்யாண மேடையை
அலங்கரிப்பதற்காகக்
கனவுகள் கண்ட
கன்னிப்பூக்கள்
சவப்பெட்டியின் மேனியில்
எரிந்து விழுந்தன!
ஒரு மகா காவியத்திற்கு
உன்னை நாயகியாக்கினேன்!
நீ
ஒரு கவிதைக்குக்கூட
உருவம் கொடுக்காமல்
போய்விட்டாயே!" என்று

கண்ணீர்ப்பூக்களின் கண்ணீர் நிலைதனை
கண்ணீர்ப்பூக்களில் கவிதையாய்க் கொடுத்தவன்!நிஜக்
கண்ணீர்க் கவிதைகளை மண்ணில் விதைத்தவன்!

"உன்னையன்றி ஒரு
பெண்ணை
நெஞ்ச விரல்களையும்
நீட்டித்தொடேன்!
என்று
அஞ்சனவண்ணன்
அறிவிப்புச் செய்தது
கம்பன் நமக்குக்
காட்டும் இல்லறம்!...

வைர அட்டிகையும்
வரதட்சணை பாக்கிகளும்
உன்னுடைய
தந்தை வந்து
உடனே தராவிட்டால்...
தோகையே
உன்னைத்
தொடமாட்டேன்! என்று
இளைஞர்கள் சொல்வது
இன்றைய இல்லறம்!" என்று

அன்றும் இன்றும் தொட்டுக்காட்டி
என்றும் இளையமனங்களைச் சுட்டிக்காட்டி
நன்கு விழிப்புணர்வைத்தூண்டியவன் அவன்!

"காதல் என்றாலும் "சமூகச்
சீர்கேடு" என்றாலும் "உலகப்போராட்டம்
பண்பாடு" என்றாலும் அவன் கவிகள் கோடுகாட்டுமே!

"ஆகாயத்துக்கு அடுத்தவீடு"
ஆஹா! நம் கவிஞனுக்கு "சாகித்திய அக்கடமி" விருது!
கண்ணீர்ப்பூக்களே தகுதிதான் அதற்கு! ஆனாலும்

காத்திருக்க வைத்துக் கவிஞனைப்
பார்த்திருக்க வைத்து விழி
பூத்திருந்த வாசகமனங்களில் தேன்

வார்த்து விட்ட சேதி அது! "நீ
சேர்த்துவிட்டாய் நல்ல நீதியடி!" என்று
நீதிதேவதையை போற்றிவைக்கும் நேரமிது!

'இந்த
பூமி உருண்டையைப்
புரட்டிப்போடக்கூடிய
நெம்புகோல் கவிதையை
உங்களில்
யார் பாடப்போகிறீர்கள்!"

என்று கேட்ட கவிஞனுக்கு...
என்றும் விருதுகளாய் வாசகநெஞ்சங்கள்
குன்றாய்க் குவிக்குமே!...'வாழ்த்துக்கள் வாழ்த்துவோமே!"...

அன்று வந்தாய்! வந்து தந்தாய்!
ஒன்றாய் ஓராயிரம் விடயங்கள் பேசினோம்!
இல்லை...இல்லை.. நீ பேசி என்னைப்பேசவைத்தாய்!

பொங்கலோடு வந்தாய்! நீயே
பொங்கலாய் நின்றாய்! உன்னை
பொங்கவைத்து பொங்கிவைத்து

பகிர்ந்துகொண்ட சுகங்கள்! புதுவருடம்
புரிந்து தந்த சுகராகங்கள்! இன்றும்
நினைவுகளாய் தித்திக்க...தித்திக்க...

நேர்வகிடுச் சுந்தரியே! உன்
சீர்சிறப்பைச் சொல்வதென்றால்.....
பார்வியக்கும்! பூர்வஜென்மம் செய்த

புண்ணியமாய் வந்தடைந்தாய்!
எண்ணியவான் கலந்து சென்றாய்!உன்
எண்ணமெலாம் நிறைந்தவனைக் கலந்து சென்றாய்!

வருஷமெல்லாம் வசந்தமாய் வரு
வருஷமெல்லாம் நினைக்க வைக்கும்
நறுமணமாய் நிலைக்குமடி! உனக்காய்...

இதயமெலாம் நிறைந்து எழுதும்
இதயமடல் இன்றும் நினைவுகளை மீட்டிவிட்ட...
இதயநிறை நினைவோடு மீண்டும் மறு
இதயமடல் வரும் வரை தென்றலாய் உனைவருடி....

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=6214&hl=

இதயம் எழுதும் மடல் (17)


எண்ணமெல்லாம் நீயாய்
எனக்குள் இனிப்பவளே!
வண்ணமெல்லாம் கண்ணனாகி
எண்ணமெலாம் ஆண்டாளாய்... கவிதை படிப்பவளே!

அன்றைய நினைவுகளை
இன்றும் இதமாய் மீட்டிவிட....
இன்றைய அதிகாலை உன் தரிசனம்!

கனவில்தான்! கனவுகள்தானே
நினைவுகளின் எதிரொலியாகின்றன!
மனதில் நள்ளிரவின் நினைவுதான்!

பள்ளிகொள்ளும் புள்ளிமயில்! மனதில்
துள்ளிவிளையாடினாய்! உள்ளிருக்கும்
வெள்ளிமலர்ச்சிரிப்பினில் எனைத்தாக்கினாய்!

"கள்ளி என்னடி!" என்றேன்!
அள்ளிவரும் ஆசையோடு அழகாக நோக்கினாய்!
துள்ளிவந்த விழிக்கணையால்....

"சொல்லடி!" என்றேன்!
"இன்று என்ன தேதி!" என்றாய்!
"என்னடி நள்ளிரவு தாண்டியாச்சே!

இருபத்தியொன்றடி!" என்றேன்!
"இரு! பத்தில் ஒன்றைத்தொடடி! என்றேன்!
இரு இதழோடு இதழ் வைத்து இணைத்தாய்!

இருநிமிட மௌனங்கள்!
இருநிலை மறந்து வருடல்கள்!
ஒருநிலைக்குள் உள்ளங்கள்!.....

"ஓ! முதல் பார்வை கொடுத்தமுத்தம்!
மறந்திடத்தான் முடிந்திடுமா! விழிப்பார்வை
தொடுத்ததுவும்.... முதல்முத்தம் கொடுத்ததுவும்...

இன்றல்லவா! இன்றல்லவா!
ஒன்றாகிக் கலந்தநாள்
இன்றல்லவா! மறந்தேனடி கள்ளி!

மன்னிப்பாய்!" என்றேன்!
உன்னிப்பாய் விழிகலந்தாய்!
"மன்னிப்பா! கிடையாது! என்றாய்!

"மன்னிக்கும் கடவுளல்ல நான்! என்றாய்!
"மன்னிக்கும் மனந்தானடி கடவுள்!" என்றேன்!
உன்னிப்பாய் இழுத்தணைத்து இதழ்பதித்தாய்!

"இன்றுபோல் இருக்கிறது!
அன்று தந்த நினைவுகள்!
நன்றுதான்! நன்றுதான்!"

என்று என் நினைவலைகள்.....
நன்று நான் கண்ணுறங்கி விட்டேன்!
தென்றல் தழுவல் ஒன்று கதவு

திறந்து மெல்ல வருடியது!.....மனக்கதவு
திறந்து மெல்ல சுகமாக வருடியது! போர்வை
திறந்து மெல்ல சுகராகம் பாடியது!

"தூக்கமா!" என்றாய்..."உன்
தாக்கம் தீரவில்லை! என்றேன்!
"ஏக்கங்கள் தீர்வதற்கு நாள் வரட்டும்" என்றாய்!

மடிமீது என் தலைவைத்து
இதமாகக்கோதினாய்! "விடிகாலைப்
பொழுதடி! வீணாகலாமா!" என்றேன்!

"விடிகாலைப்பொழுதில் கவி
வடித்திடலாம்! எழுந்திருங்கள்!" என்றாய்!
"மடிமீது கவிபடிக்கப் புதுராகம் பிறக்கும்" என்றேன்!

"அடிதான் கிடைக்கும்! அதற்கெல்லாம்
முடியாது! எழுந்திருங்கள! என்றாய்!
"அடி போடி...தாடி! தேன் தாடி!" என்றேன்!

"தேன் ஓடிப்போய் விடாது!
தேன் மொழி வாடிப்போய்விடாது! இதழ்த்
தேன் வற்றிப்போய் விடாது!

காலம் வரட்டும்!கவிதைக்
கோலம் போடுதற்கு அந்தக்
காலம் வரட்டும்! கவிதைக்

கோலம் வரட்டும்! எழுந்து எழுதுங்கள்!
கோலமயில் காத்திருக்கிறாள்! மை
கோப்பையோடு!" என்றாய்!

"என்னடி! கவிதை! கவிதை! என்கிறாய்!
கவிதை நீ தராமல் கவிதை எப்படி வரும்!" என்கிறேன்!
கன்னமது சிவந்திடக் "காத்திருங்கள்! கவிதை

சேர்த்தெடுத்துக்கொடுக்கும்
காலம் வரும்! எனை
வார்த்தெடுத்துக் கொடுக்கும் நாளும் வரும்" என்றாய்!

"எழுந்திருங்கள்! எல்லோரும்
விழித்திருக்கப் போகிறார்கள்!
எழுந்திடுங்கள்! கவிதை எழுதிடுங்கள்!

வாரப் பத்திரிகைக் காரனுக்கு
நேரம் கொடுத்திருக்கிறேன்! விடியல்
காலை கொடுத்திடணும்! எழுந்திருங்கள்!" என்றாய்!

"கவிதை நீ தராமல்
கவிதை வராதடி! ஒன்று தாடி! இல்லைக்
கவிதை வராதடி போடி!" என்றேன்!

"கவிதை நன்று எழுதுங்கள்!
கவிதை ஒன்று தருவாள்!" என்றாய்!
"கவிதையே! ஒன்று கொடேனடி இப்போது!" என்றேன்!

"இன்று ஒரு வழி பார்ப்பதாக உத்தேசமோ!
ஒன்றுங் கிடைக்காது! எழுந்திருங்கள் முதலில்!"
என்று இழுத்து எழுப்பி விட்டாய்!

"என்னடி தொல்லை உன்னோடை!
சொல்லடி! என்ன தலைப்பு!" என்றேன்!
"சந்திக்கு வராத சங்கதிகள்!" என்றாய்!

"என்னடி தலைப்பு இது!
யாரடி தந்தது இதை!
சொல்லடி!" என்றேன்!

"கொடுத்தது நான் தான்!
எடுத்து எழுதுங்கள்!" என்றாய்!"தலைப்பைக்
கொடுத்தது நீயா! என்னடி சொல்கிறாய்....

கொடுப்பதற்குத் தலைப்பில்லாமல்
கொடுத்தியா இத்தலைப்பை!போடி!
கொடுத்திட முடியாதென்று சொல்லடி!"என்றேன்1

"ஏன் தலைப்புக்கு என்ன குறைச்சல்!
என்னவாம் ஏது! நாடு போற போக்கைப்பார்த்து
நான்தான் கொடுத்தேன் இத்தலைப்பை!

எந்தத் தலைப்பிலும் கவிதை
சந்தம் படைப்பவர் நீங்கள்!
இந்தத் தலைப்புக்கென்ன குறைச்சலைக் கண்டீர்கள்!" என்றாய்!

"இந்தத் தலைப்பில் குறைச்சலில்லை!
சந்தக் கவிக்கும் குறைச்சல் இல்லை!
சந்தைக் கிழுத்துவிடும் பல

சங்கதி வந்துவிடுமே! பல
சங்கடம் தந்திடுமே!" என்றேன்! "பலர்
சங்கதி வரட்டும! என்றே தந்ததே இத்தலைப்பு!" என்றாய்!

"தந்தை முழித்துவிட்டார்! சத்தம் கேட்கிறது!
தப்பாகப் போகிறது! நான் வருகிறேன!" என்றாய்!
சத்தமில்லாமல் சங்கடந்தந்து சென்றாய்!

சட்டென்று கண்விழித்தேன்!
கண்டது கனவாய்ப்போக கவிதையுனைக்
கண்டநாள் நினைவு துள்ள

வடிக்கின்றேன் மடலில்..
துடிக்கின்றேன் மனதில்!...
படித்தபின் துடிப்பாய்! நீயும்
வடித்திடு கவிதையாக!

தென்றலாய் வந்தாய்! மன
முன்றலில் மகிழ்வு தந்தாய்!
இன்றுபோல் நினைவிருக்க...உனைத்
தென்றலாய் வருடி......

மீண்டும் மறுமடலோடு இணையும் வரை.....

அன்புடன்
ஆதித்ததாஸன்

புதன், 9 செப்டம்பர், 2009

இதயம் எழுதும் மடல்! (16)



இதயத்தில் இணைந்து
இதயத்தில் காதல்
உதயத்தை நிறைத்தவளே!

இன்று காதலர் தினமடி!
இன்றுபோல் இருக்கிறது!
அன்று ஓரு நாள்.....

நன்று என் மடியில் தவழ்ந்திருந்தாய்!
"இன்று காதலர்தினம்! இன்று
ஒன்றாய் நாம் இரவுபகல்

நன்றாய் பிணைந்திருப்போம்"!
என்றாய் நீ! கன்றாய் இளம்
கன்றுகளாய் இணைந்திருந்தோம்!

வென்றுவிடும் இனம்புரியா இளமைவேகம்!
கன்றிவிடும் கன்னங்கள் பழமை நாணம்!
ஒன்றிவிட்ட நிலையில் உணர்வுகளின் தாகம்!

"என்ன இது!" என்றாய்!
"என்னடி!" என்றேன்!
"என்னவென்று சொன்னால்தான்...."

"என்னது! சொல்லடி! என்றேன்!
கன்னம் சிவந்துகொள்ளும் கவிதைக்
கண்களால் எனை அளந்தாய்!

மின்னலிட்ட கண்மொழிக்குள்
கன்னமிட்டு கண்ணடித்தேன்!
பின்னலிட்ட கூந்தலுக்குள்.....

பின்னலிட்ட என்கைகள்
உன்வதனம் சேர்த்தெடுக்க.....
மின்னலிடும் முத்ததங்களால்

கொட்டிக்கொடுத்திருக்க...
ஒட்டிக்கொண்டென்னைக் கட்டிக்கொண்டாயே!
மொட்டவிழும் புன்னகைக்குள் கட்டிப்போட்டாயே!

தொட்டுவிடும் சுகங்கள் மலை
முட்டிவிடும் மேகம்போல் தேன்
கொட்டிவிடத் துடிக்கின்ற இதழ்களாய் படர்ந்திருக்க...

"விட்டுவிடு!" என்று சொல்ல மனம்வருமா..."இன்னும்
கட்டிவிடு! நன்றாய் கொட்டிக்கொடு!" என்று
விட்டுக்கொடுக்கும் தயாளமனத்தினளாய் நீ...

"இன்றுதான் புதிதாய் காதல் பிறந்ததுவோ.."
என்று நீ செல்லமாய் சிணுங்கலுடன் நிறைந்திருக்க
"இன்று அல்லக் கண்ணே! என்றும் புதுமையடி!

நன்று வரும் நாளெல்லாம்
சுபதினமே! சுகதினமே!
இன்று மட்டும் அல்ல காதலர்தினமே!

நன்றுமலர் தினங்களெல்லாம்
என்றும் காதலர்தினமே! காதலர்க்கு
என்றும் சுபதினமே....."

என்றவென் வாய்மொழியில் தேன்மொழி நீ
தென்றல் கவி தந்தாய்! தேன்தமிழாய்
நின்றிருந்தாய்! தேனிதழ்கள் நிறைத்திருந்தாய்!

வருடம் ஒன்று நெருங்கிவிட
வருடும் இதயம் எழுதும் மடல் இன்று
மருவும் உதய உணர்வுகளால்

மாலைசூடி வரவேற்கிறது!
காலை மாலைக் கனவுகளில் இதயச்
சோலை எங்கும் காதல்மணம்....

கவிதைபாடிக் களிக்கிறது.....
கதைகளாகிக் கனிகிறது!
காதல் விதைகளாகி இனிக்கிறது!

நேரம் நல்ல நேரம்தான்....
தூரம் இல்லா தூறல்தான்...இதயம்
பாலம் போடும் வேளைதான்...

காலைக்காற்று இதமாகக்
கவிதைபாடச் சொல்கிறது...
கவிதையுன்னை மாலையாக

இதயம் சூடிக்கொள்கிறது....புதிய
உதயகீதம் பாடிவர பதியம்
போடச்சொல்கிறது! பகிர்ந்துகொள்ளத்துடிக்கிறது!....

எதிலும் எதுவும் நீயாகி இதய
மதிலின் சுவர்கள் வீணையாகி
பதிலாய் சுகமாய் நாதமாகி

புதுமை நதியில் தவழ்கிறது....காதல்
இதழ்கள் தேனில் நனைகிறது!
இனிமைத்தினமாய் இணைகிறது....

உணர்வால் உடலால் இதயப்
புணர்வால் மடலால் பயணப்
படகில் பகிர்ந்து கொள்கிறது!.....

தினப்பதிவாகி காதலர்
தினப்புதிராகி காதல்
வனத்தில் கவியாய் கவிதையாய் நீயடி!

இதயவனத்துக்குயிலே...என்றும்
இனிமை நிறைக்கும் மயிலே...
இதழ்கள் விழிமடல் முத்தங்கள்....

அன்றைய நினைவுகளில்
இன்றைய விழிமடல்கள்...
என்றுமே உணர்வுகளால்
ஒன்றிய கவிமடல்கள்...

நின்று பார்க்கும் காலமல்ல...
வென்று பார்க்கும் காலம்!நீ
இன்று பார்க்கும் கவிக்கோலம் உனை
நன்று சேர்க்கும் மனக்கோலம்!

நன்றடி கண்ணே! மடலோடு
ஒன்றடி பெண்ணே!வருடம்
ஒன்றாகப்போகிறது மடல் வரைந்து...மீண்டும்
தென்றலாய் மறுமடலோடு.....

நன்றி!
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=5870&hl=

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இதயம் எழுதும் மடல் (15)

இதயத்தில் மணம் வீசும் அதிகாலை மலரே!

உன்
உதயத்துச்சூரியனின் இதயம் எழுதும் மடல்
இன்றும் மலர்கிறது!

மலர்ந்திருக்கும்
இனிய அதிகாலைப்பொழுது இது!
மலர்ந்திருக்கும் இதய நந்தவனத்தில் உதயமாகும்.......

புலர்ந்திருக்கும்
என் எண்ணமலர்கள் என் இனியவண்ணமலருக்கு......
புலர்ந்திருக்கும் புத்தம் புதுக்காலைப்பொழுதில்....

பூமாலைச்சரமாக
கோர்த்தெடுக்கும் நேரம் இது!
பாமாலையாய் நேர்த்தியாகத் தொடுத்துவிடும் நேரம் இது!

நேரம்!
அற்புதமான நேரம்! சிற்பச்சிலையழகை.......
நேர்த்தியாகச் சேர்த்தெடுத்து மடிமீது சேர்த்தெடுத்து.........

பாரங்களை இறக்கி
மனப்பாரங்களை தூரத்தே இறக்கிவைத்து........
நேரங்களை மறந்திருந்து சுதிராகம் மீட்டுகின்ற இன்பநேரம் இது!

தூரங்களை
மனக்கணக்கில் பதித்து சற்று சிந்தனைக்கு
வேலைகொடுத்து படுக்கையில் வந்து புரண்டபோது.......

இதயத்து மலர் நீ!
"என்னங்க! என்ன தூக்கம் வரவில்லையா!
இதயத்தில் என்ன பாரம்! என் உதயத்துச்சூரியனே!

உங்கள்
இதயத்தில் என்ன பாரம்!" என்று
என்கண்ணோரம் கண்வைத்து....

இதயத்து நாதம்
இதமாகத்தாளமிட நெஞ்சோடு சேர்த்துநின்று........
விழியாலே வினாத்தொடுத்தாய்!

மௌனமொழியாலே
ஏக்கங்கள் சுமந்துநின்று
"உங்கள் இதயபாரத்தை என்னிடம் இறக்கிவிடக்கூடாதா!"என்று

ஏங்கிநின்றாய்!
"தாங்கிநிற்க நானிருக்க
தயங்காமல் கூறுதற்கு என்ன தடை!" என்றாய்!

உன் மௌனவிழிப்பார்வைகள்
படம்பிடிக்க இடம்பிடிக்கும் வடம்பிடிக்கும்.....
உன் அன்புவடப்பிடிப்புக்குள் அடங்கிவிட நான் துடித்தேன்!

என் துடிப்பறிந்து
மார்போடு சேர்த்தெடுத்து என்னை
உன்மடிமீது தவழவிட்டு மயிலிறகாய்....

உன் மயிலிறகு விரல்களினால் வருடிவிட்டாய்!
"ம்....இப்போது கூறுங்கள்! என்ன மனத்தின் அழுத்தம்!
வருத்தம் தந்த மனத்தின் அழுத்தம் என்ன! கூறுங்கள்!" என்றாய்!

"தேன்மொழியாளே!
வான்நிலவாய் நீ குளிர்மைதர
எனக்கேது வருத்தமடி!

வான்வழி தவழ்ந்துவந்த சேதியொன்று
என்சிந்தையைக் கிளறியது!
என்வழிதனில் என்மனவழிதனில் புகுந்துகொண்டு....

ஏதேதோ உளறியது!
என்எதிர்வழி நின்று ஏதேதோ கதைபேசியது!
இனம்புரியவில்லை!இதயத்தில் கனம் தெரிகிறது!

எடுத்துச்சொல்லத்தெரியவில்லை!
எப்போதோ எங்கேயோ பார்த்தமுகம்!
பார்த்துப்பேசிய முகம்போல் தெரிகிறது!

இப்போது வந்து
என்னோடு பேசிவிடத்துடிக்கிறது போன்றதொரு உணர்வு!
என்னவென்று புரியவில்லை! ஏதென்று புரியவில்லை!

இதயமதில் அது
மீளாக்கனத்தோடு இருப்பது தெரிகிறது!
இதயத்துவேதனைக்குவடிகாலாய்.........

வருந்தியழைக்கிறது!
'மருந்து நீதான்!' என்கிறது!
'புரிந்தும் புரியாத புதிர்போல் சதிராடுகிறாய்!' என்று

என்மேல் எகிறிவிழுகிறது!
காரணம் புரியவில்லை!
என்னிதயம் கனக்கிறது! அதுமட்டும் எனக்குத்தெரிகிறது!

உன்னிதயம் துடிப்பது எனக்குப்புரிகிறது!
என்னிதயத்துக்கனமதை இறக்கிவைத்துவிட
உன்னிதயம் துடிக்கிறது எனக்குக்கேட்கிறதே!"

என்றபடி உன்மடியில் தவழ்கிறேன்!
எனைச்சேர்த்தெடுத்துக் குழந்தையைப்போல் முத்தமிட்டு......
இதமாக என்னை வருடுகிறாய்!

"குழந்தைமனம் உங்களுக்கும் இதயமதில் பாரமா!
கூடாது! இருக்கக்கூடாது!" என்று கட்டிஅணைக்கிறாய்! பலகதைபேசுகிறாய்!
தொட்டில்குழந்தைபோல் தாலாட்டுப்பாடுகிறாய்!

"அமைதியாகத்தூங்குங்கள்!
அதிகாலைவேளையிது! அமைதியாகத்தூங்குங்கள்" என்று
அழுத்திச்சொல்கிறாய்!

"ஓ! அதிகாலைவேளையாடி!
அப்படியா சங்கதி!சுதிராகம்பாடுகின்ற
இன்பவேளையன்றோ! இது மதுவுண்ணும் நேரமன்றோ!

இதழ்மதுவுண்ணும் நேரமன்றோ!
புதுமலராய் மலர்ந்திருக்கும் மலருன்னில்
இந்த மதுவுண்ணும் வண்டுக்கு வேளையிதுவன்றோ! இன்பவேளையன்றோ!

இப்போது உறக்கம் என்னடி உறக்கம்!
இதுகிறக்கமன்றோ! இன்பக்கிறக்கம்!
வாடிகண்ணே! வாடி! புதுராகம் பாடிடநீ வாடி!

வாடிவிடும் வேளையல்ல!
இதயம் வாடிவிடும் வேளையல்ல!
உதயகீதம் பாடிவிடும் வேளையிது! வாடி என்வீணையே!

நாதம் இசைத்துவிட விரல்கள் துடிக்கிறதே!
இன்னும் என்ன சோககீதம்! இன்னும்என்ன எனக்கு இதயபாரம்! வாடி!
நாடித்துடிப்பறிந்து இதயநாடித்துடிப்பறிந்து......

மருந்தை விருந்தாக்கும்
சித்தவைத்தியையடி நீ!
கோடுகாட்டிக்காட்டிய பின்னும்......

அந்தக் குறிப்பறியாத முட்டாளா இவன்!
மாடிவீடென்ன மண்குடிசையில்கூட....
மனந்தரும் சுகந்தமதை மனத்தோடு இணைத்துவிடும்.....

மயக்கம் தரும்முற்றத்து மல்லிகை நீ!
என்மனமுற்றத்து மல்லிகை நீ!
உனக்காக ஓர்கவிதை! எழுதிவிடத்துடிக்கிறது!

உன்வீணைநரம்புகளை மீட்டி
உனக்காக ஒர் இராகம் பாடிவிடத்துடிக்கிறது!
வாடி என்கப்பக்கிழங்கே!வாடி! வாடிகள்ளி" என்கிறேன்!

என்வீட்டுக்கடிகாரம்
சொல்லிவைத்து அடிப்பதுபோல்
மூன்றுமுறை அடிக்கிறது!

கண்விழித்துப்பார்க்கிறேன்!
கண்டது கனவடி! கடிகாரத்தை பார்க்கிறேன்!
நேரம் அதிகாலை மூன்றுமணி!

ம்..............ம்.........சுதிராகம் மீட்டிவிட
இதமான வேளைதான்! என்னசெய்வது!
எழுந்துவந்து விசைப்பலைகையை வீணையாக.....

உனை எண்ணி...
இன் இதயத்து உதய நிலவுக்கு....
இம்மடலைவரைகின்றேன்!

"அதுசரி! யார்அந்தச்சக்களத்தி!
உங்கள் நித்திரைக்கு எமனாய் வந்து
தொந்தரவு செய்த அந்தச்சக்களத்தி யார்" என்று எனைக்கேட்கிறாயா!

"போடி! அதற்குப்பதில் வாராது!
ஏனென்றால் எனக்கே அவள் யாரென்று தெரியவில்லை!
தெரிந்திருந்தால் இந்த அதிகாலை வேளையில்....

உனக்கு மடலா வரைந்துகொண்டிருப்பேன்!!!!!!!
அடி! போடி பைத்தியமே! நீ சிரிப்பதற்காக.......
நீ மனம் விட்டு இம்மடல்பார்த்துச்சிரிப்பதற்காக..........

இருபினும் "இந்த ஆம்பிளைங்களே
இப்படித்தான்" என்று உன் இதயம் பேசுவது எனக்குக் கேட்கிறதடி!.....
அதுதான் வைரமுத்துவே சொல்லிவிட்டாரே.."ஆண்களில் இராமன் கிடையாது"......என்று

"சரி! சரி! வைரமுத்துவைத் திட்டாதே1....
அவர் என்ன செய்வார்...பாவம்..சினிமாவுக்குப்பாட்டெழுதவந்தால்
உள்ளதையும் எழுதவேண்டிவந்துவிடுகிறதே....

உண்மையும் அதுதானே.....
வாழ்வியலின் யதார்த்தம் அதுதானே....
நகைச்சுவைக்காகக்கூறினேன்.....நீயும் கொஞ்சமாவுதல் சிரிப்பாயல்லவா...

வைரமுத்து கோவிக்கமாட்டார்!'
என்ற நம்பிக்கையில்தான்....
பார்க்கலாம்... அடுத்துவரும் மடல்களில்....

வைரமுத்துவின்
கவிதைவரிகளில் நான் இரசித்தவற்றை
நேரம் கிடைக்கிறபோது உன்கூட மடல்மூலம் பகிர்ந்துகொள்கிறேனே.....

அவருடைய "தண்ணீர்த்தேசம்" என்ற
கவிதைத்தொகுப்பை எடுத்துப்பார்! அதில்
எத்தனையோ விஞ்ஞானப்புள்ளிவிபரங்கள்...

மெஞ்ஞானத்தோடு சண்டைபிடிக்கவைக்கும்...
அற்புதமான கவிதைத்தொகுப்பு அது.....
"சரி! சரி! அதிகாலைவேளையில்.....

இன்னும் கொஞ்சநேரம் பாக்கி இருக்கிறது!
வாருங்கள் சற்று சங்கீதம் பாடுவோம்" என்று
மனத்தினால் நீ கூடுவது உணர்வலைகளில் புரிகிறது!

அதிகாலை வேளை! ஆனந்தக்கோலம்!
சுதிராகம் பாடும் இதயம் சுகமான நேரம்!
மதிகாலை வேளை மயக்கங்கள் நாடும்!
புதிராகும்! கூடும்! இதயம் புலர்காலை தேடும்!

இதமான இளந்தென்றல்தாலாட்ட தென்றலோடு
தென்றலாய் மறுமடலோடு உன்னை வருடும்வரை....

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4144&hl=

நன்றி
சுபம்!

இதயம் எழுதும் மடல் (14)

அருந்தமிழ்க் கவிதைக்குள் விருந்தாகும்
இளந்தேன்மொழித்தென்றலே!

உன்னோடு இணைந்திருக்கும்
உன் உதய இதய ஆதியின் அன்புமடல்
இணைந்துவரும் இதய ஆத்மார்த்த இதழ்முத்தங்களுடன்....

அன்றைய நினைவுகள் இதமாகத் தாலாட்ட....
இன்றைய மடல் மனதில் இனம்புரியா
இன்பக்கிளுகிளுப்பில் பாலூட்ட......

இதய மன்றுதனில் மனம் துள்ளிக்குதிக்க.....
மனத்தோடு துள்ளுகின்ற மனத்தோடு....
விரல்கள் நர்த்தனத்தில் விசைப்பலகை துள்ளியெழுகிறது....

அள்ளிவரும் என் எழிலரசி!
உன் அழகு அள்ளியெடுத்து.....
வெள்ளித்தட்டில் அறுசுவை விருந்துபோல் உன்அழகு.....

ஆசையுடன் என்னைப்பார்த்திருக்க....
உன் காந்தவிழிப்பார்வைசொல்லும் கவிதைக்குள்
ஆயிரம் தந்தி என்விரல்கள் சேர்த்திழுத்து மீட்டவைக்க....

நாட்டியப்பேரழகே!
என் மனதை சாட்டையில்லாப் பம்பரம்போல்
ஆட்டிவைக்கும் சுந்தரியே!

சிந்தை குளிர்கிறதே!
சந்தக்கவிதைக்குள் மொந்தைக்கள் விருந்து
நம் முந்தை நினைவுகளை மீட்டிவிட....

சுருதி மீட்டிவிட.....
என்விரல்கள் உனை வீணையாக மீட்டிய.....
அன்றை நாள் நினைவு ஆட்டிப்படைக்குதடி!

சூடிக்கொடுத்த சுடர்நாச்சியாய் நீ!
கார்மேகக்கூந்தலை கச்சிதமாய் அள்ளிமுடித்து....
முல்லையும் மல்லிகையும் சேர்த்தெடுத்து கார்மேகக்கூந்தலுக்கு.....

காதல்வாசம் ஊட்டி....
கட்டுடல் மெட்டுடன் சார்ந்திருக்கும்...
பாவாடைத்தாவணியில்....

மெட்டியுடன் கொலுசு சேர்ந்து......
கவிதையுனக்கு மெட்டுப்போட்டுவிட....
கல்வாழை மூக்குத்தி கண்களுக்குள் மயக்கந்தர.....

கோவைப்பழ அழகில்..
கோதையுன் இதழ்கள் சிரித்திருக்க....
கிருஷ்ணகாந்தவிழிக்கண்கள் பலநூறு கவிபடைக்க.......

மடிமீது தவழ்ந்திருந்து....
வண்ண விருந்ளித்தாயே....
அன்றைய நாள்...... இன்று ஆட்டிப்படைக்குதடி...

உன்மனவுணர்வுக்குள்
ஊடுருவ விந்தை சிந்தைகொள்ளுதடி...
"நேரம்தான் போகிறதே அத்தான்" என்பாய்....

"அதிதூரம்தான் கடந்துவந்துவிட்டோம்..
இன்னும் என்ன வேண்டும்!" என்பாய்...
"நேரந்தான் போகிறதே தெரியலையே..

உன் அன்பின் ஆழம்தான்....
தடம்பதித்த இடமெல்லாம் சுழல்கிறதே...
இடம்பிடித்த உன்மனம் வடம்பிடித்து இழுக்கிறதே....

"இன்னும் இசைத்துவிடு!" என்கிறதே...
மடல் மூடித்திறந்துமூடும் விழிகள்
மயக்கம் கொள்ளவைக்கிறதே!"

கடல்மேவும் அலைகளதாய்.....
உன்இதயக்கடல் ஆழம் தெரியாத....
தெரியமுடியாது உன் புன்னகையலைகள் மயக்கிறதே!

கள்ளி! கள்ளி!
உன் சிந்தைகவர்ந்திழுக்க இன்னும் என்ன...
மின்னும் கன்னங்களோ....

சித்திரக்கோலம்போடும் நெற்றிபுரள் நீள்முடிகள்...
நீவிவிட்டு நீவிவிட்டு கைவிரல்கள் வலிக்காது.....
செவ்விதழ்கள் செய்கின்ற குறும்புகளை.....

நான் ரசிக்கின்ற சுகங்களை.....
நீ ருசிக்கின்ற பாங்குதனை....
நான் பார்க்கின்றேன்!

மேவிவரும் ஆசைகள்...
மேவிவரும் தென்றலாய்....
உன் மேவுதலில் உணர்கின்றேன்....

என்ன சொல்ல..என்ன சொல்ல..
மின்னும் நட்சத்திரங்களதாய்......
மெல்ல நீ புன்னகைக்கையில்.....

"என்னவேண்டும் என்றாலும்
எடுத்துக்கொள்ளுங்கள்" என்கின்ற
உன் நாணவிழிச்சிரிப்புக்கு அர்த்தங்கள் சொல்கிறதே...

எத்தனை முத்தங்கள் ...
எத்தனை முத்தங்கள்...
மொத்தமாய் ஆசுகவி அள்ளியெடுத்த கொடுத்த முத்தங்கள்...

பத்திரமாய் எனக்காகச்
சேர்த்துவைத்த தேன்துளிகள்...
சித்திரமாய் கணக்கெழுதாக் காவியத் தேன்துளிகள்...

எத்தனைநாள் கேட்டிருப்பாய்...
"எத்தனைமுத்தங்கள் என்று
நான் எண்ண நினைத்திருப்பேன்...அத்தான்!

உங்கள் முன்வந்தவுடன் நான்
அத்தனையும் மறந்துவிட்டு மகிழ்ந்து நாணித்திருப்பேன்"...என்று
எத்தனைநாள் கேட்டிருப்பாய்...

"போடி கள்ளி.!.போடி பைத்தியமே!...
வாடிவிடும் மனம்கூட வசந்தம் கண்டுவிடும்
உன் அசத்தல் நிலைகண்டால்...

நிசத்தில் சொல்வேனடி...
அசத்திவிடும் அழகு அதில்
நிசத்தில் உன் அன்பழகு!

இரண்டும் திரண்டு
இணைத்திருக்கும் நிசத்தில் நீ பேரழகு!
பேரழகாய் நீ பெருவிருந்து படைத்திருக்க...

மடைதிறந்த வெள்ளத்தில்
கவிதைஊற்றுக்கேது தடை....
விடைநிறைந்த பலபுதிர்களோடு......

நீ புதிர்போடும் பேரழகில்...
மடைதிறந்த புதிர்களதாய்...
காலைப்புதிர்களது சதிராடும்...

விடைமறந்து சதிர்களதாய்
சோலைப்புஷ்பங்கள் சுதிபாடும்....
மலர்மனங்கொண்டவளே...

காலைமலர்க்கதிரொளியாய்
தினம் மலர் நிறைவின்பங்கள்
வரவுவைக்கப்பிறந்தவளே!

கலர் கலர்க் கனவுகளில்...
மலர்உன் நினைவலைகள்
மனம் மகிழ் உறைவிடமாய் உணர்வலையாய் இனிப்பவளே....

அன்றைய நினைவுகளில் மனமது சதிராட
இன்றைய மடல்தன்னில் இன்பமனமது சுதிபாட
தென்றலாய் வருடல்களை மீட்டிய சுகவரவோடு
அன்றிலதாய் இதயம் மீட்டிய இனிமை நிறைவோடு

மீண்டும் தென்றலாய் உனைவருடும் இனியமடலோடு சந்திக்கும்வரை...

அன்புடன்
ஆதித்ததாஸன்
நன்றி
சுபம்!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4126&hl=

இதயம் எழுதும் மடல் (13)


இனிமைநிறை இதயத்தின் இன்பவருடலுடன்
இணைந்துவரும் இதயநிலவே!

இனிமைத் தைமகளும்
மலர்ந்து மணம் பரப்பும்
இன்பவேளையிது!....

துன்பங்கள் தொலைந்து
இனிமைத்தேடல்கள் இதயங்களின் உதயமாகும்
இன்பவேளையிது!......

புதிய உதயங்களின் சங்கீத இலயங்கள்...
சந்தம் இசைத்துவிடும் சங்கத்தமிழ்த் தையாள்
சுந்தரமாய் பொங்கிவர.....

"பொங்கலோ பொங்கல்" என்று
பொங்கிநின்ற உள்ளங்கள்...

பொங்கிநிற்கும் நம்பிக்கை
பூத்துக்குலுங்கிவிட....
சேர்த்துவைத்த ஆசைகளின் நாத்துக்கள் துளிர்விட....

பாஷைகளின் மௌனவிழிப்பாஷைகளின்
ஆசைகளின் உந்துதல்கள்......
உந்தித்தள்ளிவிட....

நந்தவனமயில்களின் நர்த்தனங்கள்
நந்தவனமலர்களின் முத்தத்தில்
சித்தங்கள்குளிர்ந்துவிடும்.....

புத்தம்புது சிந்தனைகள்
சந்தம்இசைத்துவர....
சந்தனத்தென்றல் சந்தோஷம் கூட்டிவிட.......

நந்தவனக்குயிலே! என்
சிந்தைவனக்குயிலே!
சந்தோஷக்கணைகளாக சங்கமிக்கும்...

சங்கத்தமிழ்க்காதலன்! உன்
சிந்தைகவர்கள்வன்....
இவன் இதயம் எழுதும்மடல்!

உனக்காக.. இவன் இதயம் எழுதும் கடல்!
இவன் வலம்வரும் உலகத்தில்
இவனோடு இணைந்துபயணிக்கும் சுந்தரியே!

உனக்காக....
மடல்கள் கடல்போல் விரிந்திருக்கும்! மனக்
கடலில் என்மனக்கடலில் மலர்ந்துவரும் மடல்கள்.....

உனக்காக..
வளர்ந்துவரும் மடல்கள் ஏராளம்!
எனக்கான உனக்காக விரிந்துவரும் மடல்கள் தாராளம்!

விசைப்பலகை
விரட்டாத வீணையாக மீட்டுகையில்
இசைந்துவரும் விரல்கள் சுருதிபிசகாது இசைத்துவிடும்!

இருப்பினும்....
நேரம் போதாத நிலைதான்!
தூரம்போய்நின்ற பயணங்கள் நிலைதான்!

தொடரகின்ற மடல்களின்
தடைகளின் விடையென்பதை....
நான்சொல்லியா நீ அறிவாய்!

தடைகள் தாண்டிவந்து...
விடைசொன்ன காதலின் மோதல்சகியே!
பாதைகள்.... பயணங்கள்.....

விடைதேடும் வேளைகள்.....
விடியல்களை வரவுவைக்கும் நேரங்கள்!
வருகின்ற விடியல்கள் பலர்வாழ்வுக்கு வரவுவைக்கும்....

துருவங்களை இணையவைத்து.....
பலர்வாழ்வுக்குப் பாலமிடும்!
வருகின்ற வசந்தங்கள்....

நல் மனங்களுக்குள் "சொந்தங்கள்
தரும்" என்ற நம்பிக்கை...
தினம்தினம் காத்திருப்புக்கள்!

காத்திருப்புக்கள் கனிந்துவந்து
கதவுகளைத்தட்டி சேர்த்திருப்புக்கு வழிசொன்னால்...
அதுதானே சொர்க்கம்!

நல் மனங்களைத் தாலாட்டி....
நல் மனங்களைக் குளிர்வித்து...
தொல்லைகளை நீக்குகையில் கிடைக்கின்ற இன்பம்.....


"அடுத்தவர் நலத்தை
நினைப்பவர்தமக்கு ஆயுள் முழுவதும்
சுபதினம்" என்பான் கவியரசன்!

சுபதினங்கள் கூடிவர...
சூழ்சோகங்கள் கலைந்துவிட...
நடந்துவரும் நாட்கள் நம் முயற்சியின் வேகங்கள்!

"முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்!" என்பதெல்லாம்
மனதோடு பின்னிப்பிணைந்த அநுபவ ஞானங்கள்!

முயற்சியுடன் முனைவோம்!
முடிந்தவரை தொடர்வோம்!
"விடியும்" என்ற நம்பிக்கை எழுச்சியுடன் நடைபயில்வோம்!

வெற்றி நம்கையில்!
சுற்றிவரும் மனங்கள் வசம்
சுபதினங்கள்!......

எழுவோம்! ...
எழுவோம்!....
எழுகதிராய் படர்வோம்!.....

நல்மனங்களின் துயரங்கள்
துடைத்திடவே நடைபயில்வோம்!
கல்மனங்களையும் கரைத்திடவே
விடைகொடுத்திடுவோம்!தொடர்ந்திடுவோம்!

மீண்டும் மறுமடலில் உனைத்தென்றலாய் வருடும்வரை..

அன்புடன்
ஆதித்ததாஸன்
நன்றி!
சுபம்!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4078&hl=

இதயம் எழுதும் மடல் (12)

அதிசய இதயம் தவழ் என் இளந்தென்றலே!

அன்போடு
ஆரத்தழுவிய வண்ணம்...
அதிசயமாய் மலரும் சுகராகங்கள் பாடிட....

இன்போடு
இதமாய் இனியநல் புத்தாண்டு
அதிரசமாய் உள்ளமதை...

திருடிக்கொள்ளும் இனிமைசுகங்களோடு......
வருடிக்கொண்டு வருகிறது!
திருடிக்கொண்டு வருகிறது!

மருவும் மலரும்
மணம் தரும் நிறைவோடு.....
மருவும் மடல் இது! உனை மருவும் மடல் இது!

"அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது" என்றான் வள்ளுவன்....

துன்பம் பறக்க...
இன்பம் நிறைக்க... இனிய
அன்பும் சிறக்க ஆனந்தம் அள்ளித்தரும்.....

இனிய புத்தாண்டில்...
புதுமைகள் வரவு வைக்க...
வனிதையுன் சித்தம் குளிரவைக்க....

உன் இனிய
இதயமதின் இன்பமுத்தங்கள்!
தனிமை தவிர்த்து...உனைத்தாங்கும் இதயமதின்..

இனிய பலகவிகள்...
இதழ்கள் மடல்தழுவி...
கனிய வலம்வரும் காலம்மலர்கிறது!

மனித மனங்களை
அசைக்கும் புனித நினைவுகள்...
இனிய இதயமதில் வருடிக்கொள்கிறது!

எத்தனை ஆண்டுகள்...
எத்தனை ஆண்டுகள்...
எத்தனை சுகங்களில் எத்துணை ஆண்டுகள்...

மொத்தமாய் மொத்தமாய்.....
முத்தங்கள் முத்தங்கள்......
சத்தமாய் சங்கீதம்...சத்தம் இல்லாத சாரீரம்...

எத்தனை சுகங்களடி!
எத்தனை சுகங்களடி!
பத்தரை மாற்று உன்னால்...எத்தனை சுகங்களடி!

வித்தைகள் தருபவள் நீ!
வீணையின் வீணையடி!
இத்தரை மீதில் உன்னால் எத்தனை சுகங்களடி!

சட்டென்று கைபிடிப்பாய்!
பட்டென்று படம்பிடிப்பாய்!
மொட்டவிழ் இதழ்த்தேன் நிறைத்து....

கட்டவிழ் கவிவடிப்பாய்!
சிட்டென்று பறக்கவைப்பாய்!
சிங்காரத்தேர் இருத்தி....

மொட்டவிழ் வான்பரப்பினிலே...
கொட்டும் மழைசுகம் கொடுத்து நிற்பாய்!நீ
கொடுத்துவிடும் சுகங்கள் கொடுத்து விடும் நிஜங்கள்!

தொடுத்துவிடும் மாலைகளாய்....
எடுத்துவர புகழ்நிறைத்துவர அடுத்துவரும் தினங்கள்
கொடுத்து விடும் மனங்கள் தொடுத்துவிடும் மலர்மாலைகளாய்.......

தடுத்துவிட முடியாத
யாரும் தடுத்துவிடமுடியாத...
கொடுத்துவிடும் கலைகள்! நீ

தொடர்ந்துவரக்கலைகள்...
தொடுத்துவிடும் நிலைகள்! தேன்மொழிநீ
கொடுத்துவிடும் கடல் அலைகள்! தென்றல்தவழ்ந்து வர...மலைசுகங்கள்....

மலைக்குள்
மலைத்துவிடும்! மனம்
அலைக்குள் சிலிர்த்துவிடும்! மனவனம்...

சிலைக்குள்
சிவந்துவிடும்! செவ்வான
சிலைக்குள் நிலைத்துவிடும்!

என்மனவலைக்குள்
மலைக்கவைக்கும்....
உன்மன வலைக்குள் மூச்சாகி....

கூச்சமில்லா மூச்சுக்காற்றாகி...
அலைக்குள் அலையாகி......
ஆழ்ந்தெடுக்கும் முத்தாகி.......

மலைக்குள் மலைக்கவைக்கும்
பொதிகைத் தேன் மொழிச்சுரங்கமடி!
கலைக்கும் நினைவுகள் அலைக்கழிக்கவைக்கும் போதினில்...

கலைக்குள் கலைமகள்
நீ கவிதை சொல்லும் பேரழகு...
மலைக்கும் மகிழ்வினில் நான் எனைமறந்து போகிறேனே.....

நிலைக்கும் சுக நினைவுகள்
சுகராகங்களில் மிதக்கவைக்கும்...
எனக்குள் இருப்பவளே! என்னுயிர்க்காதலியே!

என் மனத்தை நிறைப்பவளே!
உன்னுயிராய் எனை நினைத்து....
தினத்தை வரவுவைக்க தினகரானாய் திகள் ஒளிர் கொடுக்க....

எனக்குள் நிலைப்பவளே!
தேன்கதலியாய் இனிப்பவளே......
இதுவன்றோ புதுமையடி! ஈருயிர்கள் சங்கமித்து....

மதுமலர்த்தேனுண்ட சுகங்களடி!
மாணிக்கக்கலசங்கள் ஜொலிப்பதுபோல்
மதுமலர் உன் உதயம்......

இதய ஒளிப்பதிவாய்
என்றும் இதயமதில் இனிமைதர....
மதுவன்றோ! மலர்ச்சோலைதனில் வண்டாகி.....

இதுவன்றோ இனிமையென்று
என்றும் உன்இதயமதில்....
புதுஉதயங்கள் நான்காண நான்வடிக்கின்ற கவிமலர்க்கு....

அதுவன்றோ...
கருப் பொருளாகி...
பலர் விருப்பாகும்......

புதுமலர் மலர்சுகத்தில்
மகிழ்கின்ற புது வருடமிதில்...
மதுமலர் மலர்க்கலசத்தில் தேன்மதுவுண்ட கிறக்கத்தில்....

மதுமலர் உந்தனுக்கு....
மகிழ்கிறுக்கன் இவன்கிறுக்கல்கள்...
புதுமலர் செந்தேன்மொழியுனக்கு சமர்ப்பிக்கும் புதுவருடல் இது...

வருகின்ற சுகங்களை வரவில் வைப்போம்!
தருகின்ற நிறைவினில் நிறைவுகொள்வோம்! இன்னும்
வருமென்ற மலர்வினில் மணம்பெறுவோம்!இன்னும்
வருகின்ற மடல்களில் மனம் நிறைப்போம்!

மீண்டும் மறுமடலில்.....
இளந் தென்றலாய் உனை வருடும்வரை...

அன்புடன்
ஆதித்ததாஸன்

நன்றி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3932&hl=
சுபம்....

இதயம் எழுதும் மடல் (11)


இதயத்தை இனிமையாக
வருடும் இளந்திங்களே!

நலமா! நலமறிய ஆவல்!
நலமுடன் நாடிவரும் இன்பங்கள் தாலாட்டிட
வலம் வரும் வான்மதியாய்
வான்தவழும் திங்களதாய்
நீ எங்கும்
எப்போதும் நிறைந்திருக்க
இனிமையோடு நிறைந்திருக்க
என்றும் இறையருள் துணையிருக்கும்!

அன்று என்மடல்பார்த்த சந்தோசம்
"என்றும் வேண்டும" என்றாய்!
"இருப்பினும் ஓர் குறை!
அது என்ன வான்கோழிக்கதை!
வான் கோழிக்குணம் எனக்கேதையா!
நான் உங்கள் தமிழோடு
தவழ்கின்ற தென்றலவள்!
எனக்கேது வான்கோழிக்கதை"

என்றாய் மனதோடு!
பைத்தியமே! பைத்தியமே!
அதனாற்றான்
வைத்தியமாய் பக்கத்தில்
உனக்கேது அக்குணம்
என்றுபோட்டேனே!
அசடு! அசடு!
உன்அழகிதயத்தில் குடியிருக்கும்.....

இவன் மன உதயம் புரியாததா உனக்கு!
பைத்தியம்! பைத்தியம்!
அடி! அன்புப்பைத்தியமே!
போடி மண்டு!
"வாடி என்பக்கத்தில்!" என்றதும்
ஓடிநீ வந்துதரும் வசந்தம்
என்தனுக்கு என்றும் புதுசுகந்தமே!
"தாடி" என்று கேட்குமுன்னே....

பலநூறு தருவாயே!
வாடி நீ வதங்கிட்டால்
வதங்தகிடாதோ என்மனம்!
போடி!பைத்தியமே!
சித்த வைத்தியம் என்னிடம்!
உன் அன்புப்பைத்தியம் தீர்க்கும்
சித்தவைத்தியன்
நான்என்பாய்!

தேனாகி தேன்மொழியாகி
நானாகி நீயிருக்கும்
மானே! நீ என்னை அறிவாயே!
உனக்கெழுதும்
மடல்கூறும் கதைகள் பல
உன்உடல் தழுவும்
தென்றல் என்பாயே!
அப்படியிருக்கையில் ஏனடி!

கள்ளி! உனக்கு ஏனடி வருத்தம்!
வருத்தம் விடு!
மருத்துவனாய் நான் இருக்க
வருத்தம் வேண்டாம்! வருத்தம் விடு!
கதையோடு கதை
உன் "நேசிக்கும் தென்றல்" பார்த்தாயா!
வதையோடு
இன்பவதையோடு ஒன்றாய் சேர்த்தெடுத்த....

சுடரொளியாள் படர்ந்திடும்
வளர்ந்திடும் அழகை
நீ இரசிக்காததா!
பழகும் தென்றல்
படரும்தென்றல்
பல மனங்களோடு இரசம் சேர்க்கிறதாம்!
"விரசம் கலந்தாலும்
விபரம்தெரிந்த ஆள் நீங்களென்பாய்!"

"நேசிக்கும் தென்றல்"
என்னடி சொல்கிறது பெண்ணே!
"மண்ணுக்குள் புதுமைப்பெண்ணாய்
அவள் வளர்வாள்"
என்ற நம்பிக்கை
நம்பிக் கை
கொடுக்கிறது!
நம்பிக் கை தருகிறது!

இன்றைய நாள்
நினைவிருக்கா!
அன்றைய
நாள் என்றுமே மறந்திடக்கூடுமா!
அன்று
பயணித்த அன்று
உன் கண்கள் பனித்த நாள்!
"பிரிவு" என்ற ஒன்று....

என்னையும் உன்னையும்
உடலளவில் கடல் பிரித்து
வான் வழிசுமந்து
மடலெழுதும் நிலை தந்த நாள்!
வான் மதியுனக்கு
கடலெழுதிய கடல்நீர்
உன்கண்ணிறைத்து
விழிமடல் எழுதிய நாள்!...

தழுவிவரும் தென்றல் உனை
பிரிவு மடல் தழுவிய நாள் இன்று!
பரிவு! அதனோடு பிரிவு!
இணைந்துவந்து
கடமைகள் அழைக்க
காத்திருப்புக்கு வழி
வகுத்த நாள் அன்று!
இன்று நினைத்தாலும்......

மனது கசக்கிப்பிழிகிறது!
வார்த்தைகளால்
மழுப்பி மனம் மறைத்து
"அடி!பைத்தியமே!
இன்னும் நான்கு வருடங்கள்!
காத்திரு!
பூத்திருக்கும் உன்விழிகளுக்கு
பரிசுகள் காத்திருக்கு" என்றேன்!

மனதுள் பொங்கிநின்ற துயரக்கண்ணீரை
மனதுக்குள் பொத்திவைத்து
உன்னை ஆற்றினேனே!
பக்குவமாய்
உன் பரிசுத்த இதயமதில் கண்டுணர்ந்து
"பக்குவமாய் மறைத்துவிட்டு
என்னை நீங்கள் தேற்றுவது
எனக்குப்புரிகிறது!

போய்வாருங்கள்!
என்றுசொல்ல மனதில்லை!
உங்கள் மனதோடு
நான் வருகிறேனே! தடையென்ன அதற்கு"
என்றாய்!
உன் உணர்வுகள் படம் பிடித்த
என்நிலைபுரிந்த உன்இதயமதின்
சக்தி உணர்ந்து வியந்தேன் அன்று!

இன்று நினைத்தாலும்
புத்திதான் பேதலிக்கிறது!
பைத்தியம் நான்தானடி! பைத்தியமே!
மத்தியில் மனங்களின்
மத்தியில் இடம்பிடித்த என்னால்
என் புத்தியைச்சரியாய்
வைத்திருக்க முடியாத
திண்டாட்டம்!

பக்தியோடு பல கதைகள்
பக்குவமாய் நீ சேர்த்திருந்தாய்!
சக்தியோடு சக்தியாக
சிக்குகின்ற புதிர்களுக்குப்பதில்தெரியா
புத்தியுடன் நான் இருந்தேன்!
கச்சிதமாய் புரிந்து காற்றலையோடு
சக்தியதை நீ கொடுக்க
சக்தியுள் புத்தியுள் சக்திமிக்க...

சாதனைக்கு வழிசெய்த
சக்தியுன்னால் சக்திபெற்ற சக்தியானேன்!
இன்று நினைத்தாலும்
உன்சக்திதந்த தென்பு புத்தெழிலாய்
வென்றுவிட வைக்கிறது!
'தொட்டதெல்லாம் ஜெயம்" என்ற
சக்தியாக மிளிர்கிறதே!
உடலால் பிரிந்திருந்தாலும்....

சக்தியுள்ள உணர்வாலே
சந்தித்தித்து சந்தம் இசைக்கின்ற
விந்தை யார்க்குவரும்!
நமைத்தவிர யார்க்கு அது
கிடைத்துவிடும்!
நினைவோடு நினைவுகளாய்
நினைவுகளால் மடல்வரைந்து
கனவுகளின் சங்கமத்தில்...

சங்கமிக்கும் நினைவுத்தென்றலே!

மீண்டும் மற்றுமொரு மடலில்
இளந்தென்றலாய் திங்கள் உனை வருடும்வரை.....

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3839&hl=