வெள்ளி, 2 அக்டோபர், 2009

இதயம் எழுதும் மடல் (20)


கிழக்குநோக்கி விழிமடல்திறக்கும்!
வழக்காய் மனம் கிழக்காய்
கிழக்கின் பார்வையில் இதய
விளக்காய் ஒளிர்பவளே!உன்

கிழக்கில் இருந்து இன்றும் ஒருமடல் உனக்காய்.....

காலையது சிந்தனைகள் பிறப்பிடம்!
மாலையது ஏக்கத்தின் இருப்பிடம்!நள்ளிரவு
சோலையுடன் உற(றை)விடம்!

பாலைவனமானாலும்
சோலைநீ இணைந்துவிட்டால்...
காலைமலர்த் தென்றல்தவழ் சோலையாகுமே!

"என்ன புதுக்கவிதை" என்கிறாயா...
சின்னதாய் ஒரு கிறுக்கல் சிந்தனையில்....
சின்னக்கண்ணம்மா உனக்காய்...

"என்னாச்சு!மூடு வந்தாச்சா!" என்கிறாயா....
சொன்னாத்தான் புரியணுமா மண்டு...இதழ்கள்
சொன்னாத்தான் விரியணுமா கற்கண்டே...

"சரி!சரி! புரியுது புரியுது"...என்கிறாயா..
விரிகிற விழிகள் பதில் சொல்லுமே மண்டு...
"சரி சரி தொடரட்டும!" என்று இதழ் முணுமுணுப்பா...

சிரி! சிரி! சிரிக்கின்ற அழகே அது தனிக்கனி!
விரிகின்ற இதழ்கள் வடிக்கின்ற தேன்கள்
மரிக்கின்ற போதும் வேண்டுமடி மண்டு...

சிரிக்கின்ற அழகைப்படம் பிடித்தால் மடல்
விரிக்கின்ற தமிழே தொடர்கதையே...
விரிக்கின்ற கடலலைபோல் படர்கதையே!கடல்

சிரிக்கின்ற கவிநயம் கூட்டிடுமே...
எரிக்கின்ற காற்றும் குளிர் சேர்த்திடுமே!கவி
விரிக்கின்ற தேன்தமிழ் சுதிகாட்டிடுமே!

"குளிர்கால நடுக்கத்தில் பனி(ஐஸ்)மழையா...
துளிர்காலம் போயாச்சுக் கண்ணா!இது
குளிர்காலமையா வைக்காதீர் பனித்துகளை....

தளிர்காலம் வரட்டும் காத்திருங்கள"..என்கிறாயா!
குளிர்காலம் வந்தாலென்ன!இலை
தளிர்காலம் வந்தாலென்ன!போடிமண்டு...

வாடிநிற்கும் செடிகூட துளிர்த்துவிடும்!
மூடிநிற்கும் முகம்கூட தெரிந்துவிடும்!
ஆடிநிற்கும் பம்பரமாய் இதயம் சுழன்றடித்துநிற்கும்!

"வாடி" என்று சொல்லிசைக்கும் முன்பாக இதயம்
கூடிநின்று கூத்தடிக்கும்!தெம்பாகும்!உதயம்
பாடிவரும் பாட்டுக்கு அடிகொடுக்கும்!அடி

என்னவளே! உன்னழகுச்சிரிப்புக்கு அந்தசக்தி!
சின்னவளாய் இருந்தாலும் குண்டுமாங்காயானாலும்
மன்னவனே மயங்குகின்ற என்னவளே!

உன்னழகைச்சொல்லச் சொல்லச் சொல்லலாம்!
முன்னழகும் பின்னழகும் முன்னூறு படம்பிடிக்கும்!
என்னவளின் அழகுநிலை சின்னத்திரைத்தொடர்கதை....

இதழ்களின் சிவப்பும் விழிகளின் சிவப்பும்
இதழ்மடலோடு ஒன்றாய்ப் பதிக்கட்டும்!தொடர்ந்துபடி..
இதழோடு விளையாடும் இன்பநேரத்தில்...

இதமாய் ஒருபாடல்! இதழ்தவழ்தென்றலாய்
பதமாய் ஒருபாடல்! சுதிநயம் சேர்க்கவரும்
விதமாய் ஒருபாடல்!காவியக் கண்ணதாஸனவன்

காவியமாய்த் தீட்டிய "மாங்கனி"யில்
ஓவியமாய் ஒரு பாடல் பார்!இதயக்
காவியமானவன் வண்ணமாய்.....
"சின்ன வயதினிலே-சிரிக்கும்
செந்தமிழ்ச் சோலையிலே
கன்னிக் கடலமுதைக்-கருத்தால்
கண்டவன் யாரோடி!

தென்னவன் பிள்ளையடி-அவனோர்
சித்திரக் காரனடி!
கன்னல் வனந்தேடி-அலைந்த
காரியக்காரனடி!

நல்ல மனந்தானா!இணைந்தால்
நாடி மணப்பானா!
சொன்ன உறுதியெல்லாம்-காற்றில்
தூவி விடுவானா!

பிள்ளைக் குணந்தாண்டி-பேச்சில்
பித்தம் குழைப்பாண்டி!
வெள்ளை மனத்தாரை-வலையை
வீசிப் பிடிப்பாண்டி!

நட்ட நடுநிசியில்-ஒருநாள்
நல்ல மலரணையில்
கெட்ட குணமின்றி-எந்தன்
கிட்ட நடந்தாண்டி!

ஐயோ!
என்னென்ன சொன்னானோ!-சடையை
எட்டிப்பிடித்தானோ!
அன்னக்கொடியழகே!-உனையே
அன்பில் அணைத்தானோ!

அவ்வள வொன்றுமில்லை-கண்ணீர்
ஆற்றி நடந்தாண்டி!
கொவ்வை இதழ்துடிக்க-நானும்
கூவி அழுதேண்டி!

என்ன தவறு செய்தேன்!அவனை
எத்தித் துரத்திவிட்டேன்!
பின்னர் அவனுடனே-தனிமை
பேசக் கிடைக்கவில்லை!

முன்னர் நடந்ததெல்லாம்-துரையே
முற்றும் மறந்துவிடு!
பொன்னை நகையாக்கு- மார்பில்
பூட்டி மகிழ்ச்சி கொள்ளு!

என்று இரைந்தேண்டி-கேட்க
எவரும் இல்லையடி!
இன்று உரைத்ததெல்லாம்-வேறு
எவர்க்கும் இல்லையடி!" என்று
"
மாங்கனி"க் காவியத்தில்
மாங்கனி தன்தோழியுடன் தன்
மாங்கனி இதயத்தைத் திறந்துவைத்து

ஏங்கிடும் இனியவன் கேட்பதற்காய்
பாங்கினில் மலர்ந்திட்ட பாடல்!கவிப்
பாங்குடன் கவிகண்ணதாஸன் பாடல் அது!

சிறையினில் இருந்து இதயச்
சிறைதனை விரித்து இனிமை
நிறைவதாய் வரைந்த காவியம்!ஓவிய

நிறைவினைக் கொடுத்த காவியம்!புவியினில்
நிறைதமிழ் வடித்த பாநயம்!கவினுறை
உறைவிடப் பாசுரம்! பைந்தேன்தமிழ்த்

தேன்மொழிச் சொல்லோவியம்!அத்
தேன்மலர்க் காவியத்தைத்
தேன்மலர்ப்பொழுதினிலே சுவைத்தேனடி!

தேன்மொழித்தேவதையே!உன்
தேன் இதழ் சுவைக்கத்தந்தேனடி!மடல்
தேன் இதழ் படித்துச் சுவைப்பாயடி!அன்றுநீ

வான்வழி வலம் வந்தாய்!
மான்விழி மலர்தந்தாய்!உன்
தேன்மொழிச்சிரிப்பாலே கவித்

தேனிதழ் வெளுக்கவைத்தாய்!
மானிதழ் தவழ்கையிலே மலர்த்
தேனிதழ் நிறைந்ததடி!நிறைத்

தேன்தனை நீ குடித்தாய்!கவி
வான்மழை நான் கொடுத்தேன்!
தேன்மொழி நீ நிறைந்தாய்!உயிர்த்

தேனுடன் நீ கலந்தாய்!உன்
தேனுடல் கலந்ததனால் இதயத்
தேன்மொழி நிறைந்ததானால்....

தேன்மொழித்தேவதையே!
தேன்தமிழுக்கா பஞ்சமடி!
வான்வழி நிலவு மலர்த்
தேன்மடலுக்கா பஞ்சமடி!

மீண்டும் மறுமடலோடு உனைத்
தென்றலாய் வருடும் வரை....

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக