ஞாயிறு, 31 மே, 2009

கொடுமை


விட்டுவிடப்போகுதுயிர்!உடல்தனைச்
சுட்டுவிடப்போகிறார் சுற்றத்தார்!"என்று
பட்டினத்தார் பட்டகதை நாமறிவோம்!பல
பட்டணத்தார் படும்பாடும் நாமறிவோம்!

"கெட்டும் பட்டணம்போ!" என்று புலம்
விட்டுவந்து படும்பாடும் எத்தனையோ!
கட்டவிழ்ந்த நெல்லிக்காய் மூட்டையதாய்
கட்டவிழ்ந்து கெட்டழிகதையும் எத்தனையோ!

எட்டடுக்குப் பல மாளிகைகள் அவை
கொட்டும் கதைகளும் எத்தனையோ...
பட்டுடுத்திப் பலர் பணம்காசு தினம்
கட்டும்வகைகளும் எத்தனையோ!தம்முள்

முட்டுவதும் மோதிவீழ்த்துவதும் இங்கு
பட்டும் திருந்தாநிலை தொடர்வதுவும் புலம்
விட்டுவந்த நிலை மறப்பதுவும் தரம்
கெட்டுவிடும் நிலை வளர்ப்பதுவும்....

ஒட்டுவதும் ஒட்டி உறிஞ்சுவதும் காய்
வெட்டுவதும் இங்கு சகஜமன்றோ...தேள்
கொட்டுவதாய் சினம்கொட்டுவதும் சிலர்
பட்டுவரும் பெரும்பாடம் அன்றோ..

குட்டுவதும் குட்டக் குனிவதுவும் தொலை(வு)
எட்டிநின்று வேடிக்கை பார்ப்பதுவும்!விலை
கொட்டிச்சுதந்திரம் வாங்கிடநினைப்பதுவும் இன்னும்
பட்டுத்திருந்திடாக் கொடுமையன்றோ!


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7328&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக