skip to main |
skip to sidebar
இதயம் எழுதும் மடல் (10)
உதயத்தைப்பார்த்து
இதயத்தைச் சேர்த்தெடுத்த இளந்தென்றலே!
இன்றும் மடல்வரைய
நேரம் கூடிவந்து தாலாட்டுகிறதே!
அன்றும் இன்றும் என்றும் ஒன்றுதான்!
காதல்!காதல்!காதல்!
கனவுகளில் கவிதைகளில்
கவிதை உன் நினைவுகளில்.....
காதல் மொழிபேசும் உணர்வலைகள்!
என்றும் உன்சொந்தமான
தாலாட்டுத் தென்றல்தான்!
தென்றலை நேசிக்கும்
பிரியமானவன் பிரியமாய்
மடல்களின் உரிமமாய் தவழ்ந்திருந்து.....
தவித்திருக்கும் உடல்தனுக்கு
பாலூட்டும் நேரம் இது! மதுரசப்
பாலூட்டும் நேரம் இது! "தேனூடும் இதழ்களில்...
தேன்தமிழூறும் அலைகளுக்கு இடைவெளியா!" என்றாய்!....
இடைவெளியா! இடைவளியா! காற்றின் இடைபுகுந்து
மடைதிறந்து மடல்திறந்து மனந்திறந்து பேசிவிட...
காற்றின் வெளிக்குத் தடையேது!
காற்றின் அவைகளுக்கும் தடையேது!
தவழ்ந்துவரும் தென்றலில் திங்கள்
இணைந்துவரும்போது....
தடைபோட யாருண்டு!
தடைதாண்டிவிட தடையேது!
விடைபுரியா மயங்கிடும் மனங்களுக்கு
நடைபயிலும் தென்றல்தான் விடை சொல்லிடுமே!
"அவள் அப்படித்தான் தொடர் என்னாச்சு!" என்று என்னவள்
நீ மனதோடு கேட்பது புரிகிறது!
வரிந்துகட்டி அவளை இழுத்துவர இஷ்டமில்லை!
அவள் எப்படியோ வருவாள்!
"எப்போது வருவாள்!"
என்ற கேள்விக்கு "அவள் வரும்போது
வருவாள்!" என்பதே பதிலாகும்!
"என்ன றஜனி ஸ்டைலா என்கிறாயா!"
எப்படியோ சொல்லிக்கொள்! அப்படியே அவள்
எப்படித்தான் வருவாளோ அப்படியே வரட்டும்!
"சரி! சரி! அதைவிடுங்கோ!
"நேசிக்கும் தென்றல்" சுடர்விழி என்னானாள்!" என்று கேட்கிறாயா!
யாசிக்கும் அவள் எனக்குமட்டும் சொந்தம் என்றாள்!
"உங்களை நேசிக்கும் என்னை
ஏன் வெட்டவெளிச்சம் போட்டுக்காட்டுகிறீர்கள்!" என்கிறாள்!
என்ன நினைத்தாளோ! சட்டென்று திரும்பி...
"சரி!சரி! காட்டுங்கள்! நீங்கள்தான்
கவிதைகளில் கதைகளில் பலர்
கதைகளைப் படம்பிடிப்பீர்கள்!
நல்ல மனங்களில் இடம்பிடிப்பீர்கள்!
தடைசொல்ல நான் யார்! தொடருங்கள்!" என்றாள்!
"நானும் உங்கள் வாசகிதானே!
உங்களை வாசித்து நேசிக்கும் வாசகிதானே!
வாசிக்கின்றேன்! வாசகர் முற்றமதில் பதியுங்கள்! பார்க்கின்றேன்"
என்கிறாள் இப்போது!
நிலாவவள் ஆதங்கம்
உன்தனுக்கு பொறாமைதான் தரும்!
நிலாவவள் ஓர்தங்கம்! அவள்
நீ பொறமைப்படும் ஒருத்தியல்ல!
வருத்தம் வேண்டாம்! கங்கை சடைவைத்தவனும்
திங்கள்தனைச் சூடிய விந்தைக்கதை புதிதல்லவே!
சந்தைக்கு வந்த கதைதானே!
வாடிய மனந்தனில் வருடுகின்ற தென்றல் நீ!
உனக்கு இது புரியாததா!
புரிந்ததானால்தானே....
நேசிக்கும் தென்றலானாய் நீ!
திங்களவள் முற்றமதில் இணைந்து...
தாலாட்டும் சுடரொளிக்கதிரொளி
மறைந்திருக்கும் செடிகொடிகளுக்கும்
ஒளிகொடுக்கும் நிலைதானே!
படம்பிடிக்கும் பலரின்
பொறாமைக்கு பதில் சொல்லும் நீ
பொறாமைப்படுவாயா!
இல்லையில்லை!
நீ என்றும் அந்நிலையில் இல்லையில்லை!
என்னவள் உன்னிடம் பொறாமைப்பேச்சுக்கே இடமில்லை!
உனக்கு நன்கு புரியும்!
பொறாமை மனங்களில் சுடரொளி தங்குவதில்லை!
சுடரொளி தன்னைக்கொடுத்து இனிமைதருவாள்!
தனிமைவிரட்டி இனிமை தருவாள்!
மடல்விரித்து மகிழும் இளந்தோகைமயிலவள்!
"வான்கோழி வான்மயில்தோகைப்போர்வைக்குள்
நுழைந்திட்டால் கானமயிலாகிடுமா!"
தோகைமயிலாகத்தோன்றும் பல வேடங்கள் போடும்
வான்கோழி மனிதமனமல்ல அவள்மனம்!
தேனோடு தேன்தமிழாய்
சுடர்பரப்பும் சுடரொளியாய் தென்றலாய்த்
தவழ்ந்திருக்கும் திங்களவள்!
பொங்கும் பூம்புனலாய் எங்கும்
அவள் சுடர்வீசிடுவாள்!
"என்ன! சுடரொளி பற்றிய புராணமாய் இன்றைய மடலா!"
என்று....
நீ விழிப்புருவ உயர்வு வேண்டாம்!
"சுடரொளி" என்னவோ தெரியவில்லை....
மனதோடு இடம்பிடித்த
உன்னோடு சண்டைபிடிக்கிறாளே!
அன்புச்சண்டை அது!
நீ அடம்பிடிக்காதை! அவள் அன்புப்பிரியை!
புரியாத பல புதிர்களைப் போட்டு எனைத்
திக்குமுக்காடச்செய்தவள் அவள்!
அவளை அன்போடு ஏற்றுக்கொள்வாய்!
பண்போடு மனிதப்பண்போடு ஏற்றுக்கொள்வாய்!
வெறும் "வாய்ப்பண்பாடு" பேசுபவர் மத்தியில்...
என்பாடு நீயறிவாய்!
என்னோடு இணைந்திருக்கும்
என்பாடு உனக்குப் புரியாததல்லவே!
கூட்டுக்குள் இதயக்கூட்டுக்குள்
இணைந்திருக்கும் உன்தனுக்குப்புரியாததா!
உயிரோடு ஒன்றாய் ஒரு போர்வைக்குள் உணர்வோடு....
உடல்தழுவி இதயவானில் சிறகடித்த நாட்கள்
நினைவுதர கனவுகள் உன்னோடு
உதயத்தை நாடிவிட மனதோடு....
என்னோடு என்னுயிரோடு கலந்து
உன்னோடு பேசிய நிறைவோடு......
இனிமை உணர்வோடு....
மீண்டும் மறுமடலில் தென்றலாய் வருடும்வரை...
நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன் http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3788&hl=
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக