சனி, 6 ஜூன், 2009

"பெண்ணின் பெருமை!"

கண்ணில் தெரிகின்ற
கவிதையே!மனக்
கண்ணில் தெரிகின்ற
கவிதையே!தினக்
கண்ணில் தெரிகின்ற
கவிதைகள் மனக்
கண்ணில் தெரிகின்ற
கவிதையுன் கவிதையே!

பெண்ணில் இருக்கின்ற
உணர்வுகள் இதயப்
பெண்ணே! உனக்குள்ளும்
கனவுகள்!உதயக்
கண்ணில் இருக்கின்ற
காந்த சக்திக்குள் இதயப்
பெண்ணே! எனக்குள்ளும்
நீந்தும் உணர்வுகள்!

எண்ணில் இனிமைகள்!
எழுதும் பொழுதில் புதுமைகள்!
மண்ணில் இனிமைகள்!
மலரும் பொழுதின் மகிமைகள்!
கண்ணில் தெரிந்திட
கவிதை மலரும் உணர்வுகள்!
எண்ணில் புரிந்திடும்!
புவித்தை மகளின் புதுமைகள்!

பெண்ணில் இணைந்திடும்!
பெண்ணின் பெருமை உணர்த்திடும்!
மண்ணின் பொறுமையை மனது
எண்ணி மகிழ்ந்திடும்!
விண்ணில் நிலவினை
பெண்ணுக் குவமையாக்கிடும்!
மண்ணின் நிலவினாய்
பெண்ணின் தண்மை உணர்த்திடும்!

கண்ணில் கருணையாய்
கனிவு கூட்டும் பெருமையாய்
மண்ணில் அன்னையாய்
இனிமை காட்டும் தன்மையாய்
பெண்ணில் பெருமைகள்
மண்ணில் புதுமை கூட்டிடும் புவிப்
பெண்ணில் அருமைகள் மனக்
கண்ணில் இனிக்குதே!

கண்ணில் காதலைக்
கருத்தில் இனிய மோதலை
கண்ணில் கவிதையாய்
களிப்பில் இனிக்கும் மாதினை
விண்ணில் விழிச்சுடர்
வான்சுடரின் ஒளிர்வினை இதயம்
விண்ணில் வழித்தொடர்
வான்மதியாய் வடிக்குதே!

கண்ணில் தோன்றிடும்
கவிப்பெண்ணே! கவிதையே!உனை
மண்ணில் பாடவே "மாங்கனி"
கவிப்பெண்ணாய் இனிக்குதே! செம்
மண்ணில் நீரைப்போல்
செந்தமிழின் சுவையைப்போல்
பண்ணில் பாடலாய்ப்
பைந்தமிழ்த் தேன்மொழியாய்ப் பெருகுதே!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக